/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சீனாவில் பிரதமர் மோடி சாதித்தது என்ன?
/
சீனாவில் பிரதமர் மோடி சாதித்தது என்ன?
PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM

அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டின் அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் நடத்திய தனித்தனி பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அவை, நம் நாட்டின் வெளியுறவு கொள்கையை மட்டுமல்ல, சர்வதேச, புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை புதிய திசையில் வழிநடத்தக்கூடிய வல்லமை பெற்றவை. ஆனால், அது இந்த மூன்று தலைவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்தே இருக்கும் என்பது மட்டும் உறுதி.
மோடியின் சீன பயணம், அமெரிக்கா உடனான நம் நாட்டின் இறக்குமதி வரி குறித்த பிரச்னை சூடு பிடித்த பின்னரே முடிவு செய்யப்பட்டது என்பது திண்ணம்.
ஆனால், அது அமெரிக்காவை குறிவைக்கும் விஷயமல்ல. மாறாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டு உள்ளன.
மோடி கூறியது போல் உலகில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள இரு நாடுகளும் கைகோர்த்து, அமெரிக்காவின் ஒருதலைபட்சமான முடிவுகளை எதிர்த்தால், அதன் விளைவுகள் பயனுள்ளதாகவே இருக்கும்.
ஆனால், இவ்வாறு ஷாங்காய் அமைப்பின் மாநாடு நடக்காதிருந்தால், பிரதமர் சீனா பயணம் மேற்கொண்டிருப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், பிரச்னையின் முக்கியத்துவம் காரணமாக, இரு நாட்டு தலைவர்களும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருந்திருப்பர்.
தற்போது, இந்த மாநாடு நடைபெறும் சூழலில், பிரதமர் அதில் பங்கேற்காமல் இருந்திருந்தால், நம் நாடு எப்போதுமே தங்களுக்கு 'அடிமை சாசனம்' எழுதி கொடுத்துவிட்டதாக அமெரிக்கா கொக்கரித்து இருக்கும்.
இதுவே கூட, நம் நாட்டின் இறையாண்மை குறித்த அனாவசியமான கேள்விகளை எழுப்பி இருக்கும். இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள், பிற ஷாங்காய் அமைப்பு நாடுகளின் தலைவர்களோடு ஒரு சேர சந்தித்திருப்பதை, நேரம்- காலத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது, ஒரு புதிய கோணத்திற்கு வித்திடும் வாய்ப்பு உள்ளது.
அதாவது, சீனா துவங்கி, இந்தியா-, ரஷ்யா வரையிலான புவியியல் அரசியலில் ஏற்பட உள்ள மாற்றங்கள், சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மையை தோற்றுவிக்கும்.
குதிரை கொம்பு
அதே சமயம், நம் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், அண்மை காலங்களில் வெளிப்படையாக சொல்லாமல் சொல்வது போல, சர்வதேச அரசியலின் அச்சு அமெரிக்கா - -ஐரோப்பா கண்டங்களை விட்டு விலகி, நம் பிராந்தியத்தில் மையம் கொள்ளும்.
ஆனால், அதற்கு முன்னர், நம் நாடு, சீனாவுடனான பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். அதை விட முக்கியமாக, சீனா ஆதரவு பெற்ற பாகிஸ்தானுடனான பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளையும் பேச்சு வாயிலாக தீர்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே, சொல்வது எளிது. செயல் வடிவம் கொடுப்பது, கிட்டத்தட்ட குதிரை கொம்பு தான்.
பாகிஸ்தான் உடனான நம் பிரச்னைகளின் பின்னணியில், ஷாங்காய் மாநாட்டில், பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இதுவே, பாகிஸ்தான் நம் விஷயத்தில் நல்லபிள்ளையாக நடந்து கொள்ளும் என்பதற்கு உத்தரவாதம் கொடுத்துவிட முடியாது.
அது போன்றே, பாகிஸ்தானின் 'ரிங் மாஸ்டர்' என்று கருதப்படும் சீனாவும் செயல் வடிவத்தில் நம்மோடு நிற்கும் என்று எதிர்பார்த்துவிட முடியாது. இது இப்படி என்றால், சீனாவுடனான நம் எல்லை பிரச்னை குறித்து பேச்சு மூலம் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்துள்ளது.
ஆனால், அதனால் மட்டுமே அது இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற சமன் நிலையை அடைந்து விடாது. சுமார் 4,500 கி.மீ., நீளமுள்ள இரு நாட்டு எல்லையில் ஒவ்வொரு இன்சிலும் பிரச்னை தான்.
இதற்கு ஓரே முடிவு, இரு நாட்டு தலைவர்களும் பேசி முடிவு செய்து, அதற்கு செயல்வடிவம் கொடுக்க தங்களது பேச்சுவார்த்தை குழுக்களுக்கு அவ்வாறே அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அவ்வாறு நடந்தால் கூட, எல்லை பேச்சு முடிவதற்கு ஐந்தாறு ஆண்டுகள் ஆகும். இடைப்பட்ட காலத்தில், இரண்டு நாடுகளிலும் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் பேச்சுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
புதிய எதிர்பார்ப்புகள்
இதுவே, நம் நாடு பாகிஸ்தானுடனான காஷ்மீர் எல்லை பிரச்னைக்கும் பொருந்தும். காரணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில், அக்சாய் சின் பகுதியை அந்நாடு சீனாவிற்கு தாரை வார்த்துவிட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன.
அதனை காரணம் காட்டி, காஷ்மீர் பிரச்னையை தீர்க்க தாங்களும் பேச்சில் பங்குபெற வேண்டும் என்று சீனா சொல்லித் திரிகிறது. ஆனால், இரு நாட்டு பிரச்னையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை என்ற முடிவில் மோடி அரசு உறுதியாக உள்ளது.
இந்த பின்னணியில், பிரதமர் மோடியின் சீன பயணம் இரு நாடுகளிலும் நம் பிராந்தியத்திலும் புதிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் துளிர்விட காரணமாக மாறி உள்ளது.
அதே சமயம், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக அது மாறாமல், 0சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட அனைத்து நாடுகள் உடனான நம் புவிசார் தனித்துவத்தையும்; இறையாண்மையையும் பாதுகாத்து முன்னேறுவது, மேலும் அதிக முக்கியத்துவத்தை பெறும்.
என்ன, 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே' என்ற வரிகள் புவிசார் அரசியலுக்கும் பொருந்தும். அதுவே நிகழ்கால உண்மையும் கூட.
என்.சத்தியமூர்த்தி
சர்வதேச அரசியல் ஆய்வாளர்