ADDED : நவ 27, 2021 08:27 PM
கோவை: 'குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க, சிறுதானிய உணவுகளை கொடுப்பது பயனளிக்கும்' என, ஊட்டச்சத்து ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தேசிய குடும்பநலத்துறை கணக்கெடுப்புபடி, நமது நாட்டில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், 38 சதவீதம் பேர் வளர்ச்சிக் குறைபாட்டாலும், 59 சதவீதம் பேர் ரத்த சோகை குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடே இதற்குக் காரணம்.இதை தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு, சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.மத்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை ஆகிய அமைச்சகங்கள் சார்பில், மாநில தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள அக்கடிதத்தில், 'குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையில் கவனம் செலுத்தும் வகையில், 'பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துக்கான முன்னடைவு' (போஷான்) திட்டத்தில், சிறுதானிய உணவுகளை மக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கவும், வாரம் ஒரு முறையாவது சிறு தானிய உணவுகள் குழந்தைகள் உண்பதை உறுதி செய்யும் படியும்' வலியுறுத்தியுள்ளது.குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளை எந்த நேரத்தில், எந்த வடிவத்தில் வழங்குவது பயனுள்ளதாக இருக்கும் என, கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்சலா காந்தியிடம் பேசினோம்.அவர் கூறியதாவது:கம்பு, ராகி, சோளம், தினை உள்ளிட்ட சிறுதானியங்களை உண்பது குறைந்து வருகிறது. சிறுதானியங்களில், நார்ச்சத்து, புரதச்சத்துகள் அதிகம்; அவற்றை உண்பதால், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கலாம்.வெள்ளைச் சோளத்தில், நார், புரதச் சத்து மற்றும் ஆண்டிஅயோடிக் அதிகம். பச்சிளம் குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்குப் பின், ராகியை அரைத்து பால் எடுத்தோ, கூழ் போல் காய்ச்சியோ கொடுக்கலாம். தினையில் பீட்டாகரோடின் அதிகம். சாமை, தினை போன்றவற்றை பாயாசம் செய்தோ, ஸ்னாக்ஸ் செய்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கம்பில், கால்சியம் சத்து அதிகம்.குழந்தைகளின் வயதைப் பொறுத்து, கொடுக்கும் அளவு இருக்க வேண்டும். செரிமானக் கோளாறைத் தவிர்க்க, குறைந்த அளவு கொடுத்து வந்தால் போதும். காலை மற்றும் மதிய நேரத்தில் கொடுக்கலாம். இவற்றில் மாவுச் சத்து அதிகம் என்பதால், இரவு, 6:00 மணிக்கு மேல் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, சிறு தானிய உணவுகளைக் கொடுத்தால், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்யலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
