UPDATED : டிச 20, 2023 11:05 AM
ADDED : டிச 20, 2023 04:08 AM

ஜெயப்பிரகாஷ்
கட்டுரையாளர், 'ஸ்டார்ட் அப் இந்தியா' ஆலோசகர்; ஆடை உற்பத்தியாளர். ஆயத்த ஆடைத்தொழிலில், மறுசுழற்சி தொடர்பான ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில், 'ஸ்டார்ட் அப்' ஏற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி வருபவர்.
படித்து முடித்த பின், மாதம், 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பலரும் வேலைக்கு சென்று விடுகின்றனர். பெற்றோரும் இதை ஊக்குவிக்கின்றனர். இதுவும் தேவை தான்; அவசியம் தான். ஆனால், ஒவ்வொருவரும் வேலை வாய்ப்பு தேடி செல்லும்போதும், மாத சம்பளத்துக்கு வேலை செய்யும்போதும், பொருளாதாரம் சுருங்கி விடுகிறது.
கல்லுாரி படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதில், சுய தொழில் குறித்த விழிப்புணர்வையும் பெற வேண்டும்; உலகளாவிய சந்தை குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு, 'ஸ்டார்ட் அப்' குறித்த புரிதல் இருக்க வேண்டும். இதுதான், தனி நபர் வருமானம் மட்டுமின்றி, சமுதாய மாற்றம், முன்னேற்றத்துக்கும் வித்திடும்.
'தான் தேர்ந்தெடுக்கும் தொழில், எந்தளவு பொருளாதாரத்தில் ஒரு நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது' என்பதுதான், 'ஸ்டார்ட் அப்'.
பிரதமரின் அற்புத திட்டம்
கடந்த, 2014ல் பிரதமர் மோடி, 'ஸ்டார்ட் அப்' திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்பின், பொருளாதார சந்தையில் மிகப்பெரும் மாற்றம், முன்னேற்றம் ஏற்பட்டது. நம் நாட்டில், 'யுனிகார்ன்' எனப்படும், ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும், 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
கடந்த, 2021ல், தமிழகத்தில் 'ஸ்டார்ட் அப்' அறிமுகம் செய்யப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும், 7,300 'ஸ்டார்ட் அப்'கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2,3 சதவீத விழிப்புணர்வின் விளைவாக வந்தவை; விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டும். வேலை இல்லாவிட்டாலும், தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.
முதலீடு தானாக வரும்!
'புதிதாக தொழில் துவங்க விரும்புவோருக்கு, முதலீடுக்கு பணம் இல்லை' என்ற நிலை இருக்கலாம். இருப்பினும், அவர்கள் திட்டமிடும் தொழில் வித்தியாசமானதாக, நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும்; அந்த தொழில் வெற்றி பெறக்கூடியதாக, எதிர்காலத்தில் பெரும் லாபம் தரக்கூடிய நிறுவனமாக வளரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டால், அவர்களது தொழிலில் முதலீடு செய்வதற்கு 'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்' எனப்படும், முதலீட்டாளர்கள் முன் வருவர். கஷ்டத்தின்போது உதவிக்கரம் நீட்டுபவர்களை தான், 'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்', அதாவது, இறைதுாதுவ முதலீட்டாளர்கள் என்கிறோம்.
தொழில் துவங்கியோர் மற்றும் 'ஏஞ்சல் இன்வெஸ்டர்'கள், லாபத்தில் பங்கு பிரித்துக் கொள்வர். ஒரு கட்டத்தில், அந்த தொழில் வளர்ந்து பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் அளவுக்கு வளரும்போது, 'வென்சர் கேபிடலர்ஸ்' எனப்படும் பெரும் முதலீட்டாளர்கள், அந்த தொழிலுக்கு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய முன்வருவர்.
இத்தகைய வர்த்தக முறையில் தான் சுவிகி, சொமோட்டோ, ஓலா போன்ற பல நிறுவனங்கள் வளர்ந்து, இன்று, உலகின் முன்னணி நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
வாய்ப்புகள் தாராளம்
ஐந்தாண்டுக்கு முன்பு வரை, 5, 10 என, விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான், 'ஏஞ்சல் இன்வெஸ்டர்'கள் இருந்தனர். தற்போது, தமிழகத்தில், 350 முதல், 400 'ஏஞ்சல் இன்வெஸ்டர்'கள் உள்ளனர்.
நாடு முழுக்க, 1.45 லட்சம் ஸ்டார்ட் அப்கள் உள்ளன; 12 ஆயிரம் ஏஞ்சல் இன்வெஸ்டர்; 150 வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்கள் உள்ளனர். உலகளவில், சந்தைப்படுத்துதலுக்கான பொருளாதாரம், நம் நாட்டில் இருப்பதால் தொழில் வாய்ப்புகளும், அதன் மீதான முதலீடுகளும் அதிகரிக்கும்.
படித்த இளைஞர்கள் அனைவரும், ஸ்டார்ட் அப் துவங்கிவிட முடியுமா என்ற கேள்வியும், பரவலாக எழுப்பப்படுகிறது. நம் நாட்டில், 140 கோடி பேர் உள்ளனர்; அவர்களில், 70 சதவீதம் பேர் இளைஞர்கள்; அவர்களில், 25 சதவீதம் பேர், ஸ்டார்ட் அப் துவங்கினால் போதுமானது. செய்யும் தொழிலின், மதிப்புக்கூட்ட தெரிந்துக் கொள்ள வேண்டும்; அதன் வாயிலாக, தொழிலை நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.
கடன் திட்டம் ஏராளம்
மத்திய அரசின் முத்ரா உள்ளிட்ட கடன் திட்டங்கள் வாயிலாக, மிக எளிதாக ஒரு கோடி ரூபாய் வரை கூட அடமானமில்லா கடன் வழங்கப்படுகிறது. முந்தைய நாட்களில், ஐ.டி., துறை சார்ந்து மட்டுமே அதிகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவம், உணவு, ஆட்டோமொபைல், ஆடை வர்த்தகம், பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு துறை சார்ந்த ஸ்டார்ட் அப்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆண்டு தோறும், மும்மடங்கு வளர்ச்சி பெறுகின்றன; ஆனால், 10 முதல், 15 மடங்கு வளர்ச்சி பெற்றதால் தான், பொருளாதார நிலை, அமெரிக்காவை போன்று வளரும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமுள்ள நாடு, இஸ்ரேல் தான். அந்நாட்டில், வீடுகளில் குழந்தைகள் வளரும் நிலையிலேயே, வியாபாரம், தொழில் செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இதனால், மாணவ, இளம் வயதிலேயே அவர்களுக்கு, தொழில் முனைவோராகும் ஆர்வம் வருகிறது; வாய்ப்பும் அமைந்து விடுகிறது. 'ஆர் அண்டு டி' எனப்படும், 'ஆய்வு மற்றும் வளர்ச்சி' என்ற கோட்பாடு இல்லாமல், எந்தவொரு துறையும் வெற்றி பெற முடியாது.தற்போதைய சூழலில் உற்பத்தி இல்லை; தொழில் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. இதை சந்தை பொருளாதாரம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் காலமாகத்தான் பார்க்க வேண்டும். அவரவர் வியாபாரத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை செய்து கொண்டால், கண்டிப்பாக மீண்டெழ முடியும்.
