'நீட்' எதிர்ப்பு போராட்டம்: மத்திய அரசு முடிவு சரியே!
'நீட்' எதிர்ப்பு போராட்டம்: மத்திய அரசு முடிவு சரியே!
PUBLISHED ON : ஜூலை 27, 2026 12:40 AM

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுகளில், கேள்வித்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், புதிதாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம் சாட்டியது.
'தேர்வு முறைகளில் சீர்திருத்தம் வேண்டும்; மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிமானா செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து, அக்கட்சியினர் டில்லியில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தினர்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த வாரம் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது, போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு, பார்லிமென்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில், அவர்களை போலீசார் தடுக்க முற்பட நிலைமை பதற்றமானது; வன்முறை வெடித்தது. தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், பார்லிமென்டை சுற்றியுள்ள பகுதிகள் போர்க்களம் போல காட்சியளித்தன. போலீசாரின் தடியடியில் பலர் காயம் அடைந்தனர்.
சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உட்பட, தொடர்ந்து நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள், 12க்கும் மேற்பட்ட மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்பதால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் நியாயமானதே என, எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. அவர்களுடன் போராட்டத்திலும் பங்கேற்றன.
பிரச்னை தீவிரம் அடைந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களை கைது செய்து விட்டதாக, மத்திய அரசு பதில் அளித்தாலும், அதில் போராட்டக்காரர்கள் திருப்தி அடையவில்லை. வினாத்தாள் கசிவு குளறுபடிகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில், போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருந்தனர்.
நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் வலுவடைந்ததுடன், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மாணவர்கள் களத்தில் குதித்தனர்.
பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோத சக்திகளின் துாண்டுதலில் போராட்டம் நடப்பதாக, தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட போதும், நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக, அவரது அறிவிப்பு மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது.
வினாத்தாள் கசிவு விவகாரம் நிர்வாக ரீதியான தோல்வி என்பதை தாண்டி, கல்லுாரிக்கு பிந்தைய வாழ்க்கை மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை, மத்திய அரசும் தாமதமாக உணரத் துவங்கியது. மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயமும் உருவானது.
அதனால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களின் நம்பகத்தன்மையை குறைக்கும் மற்றும் ஒடுக்கும் முயற்சிகள் நிறுத்தப்பட்டு, மத்திய அரசு பேச்சு நடத்த முன்வந்தது. கடந்த சனிக்கிழமை நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து, போராட்டக்காரர்களின் வேறு சில கோரிக்கைகளும், விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும் என்று அறிவித்ததால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, டில்லி மாநகரில் அமைதி திரும்பியது.
இது, மத்திய அரசுக்கு பின்னடைவு என்று சில தரப்பில் கூறப்பட்டாலும், மாணவர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளித்துள்ளது என்றே கூறலாம். அத்துடன், வினாத்தாள் கசிவு பிரச்னைகளை தடுக்க, மோடி அரசு பார்லிமென்டில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற முற்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே.
தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ள சூழ்நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்வுகளில், இனியும் தவறுகள் நடக்காத வகையில் கடும் விதிமுறைகளை அரசு வகுப்பதுடன், குறைபாடுகளை சரி செய்வதும் அவசியமாகும்.
