பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம்!
பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம்!
PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், சுற்றுலா பயணியர் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளதால், 'தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டை யாடுவோம்' என, பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான, லஷ்கர் - இ - தொய்பாவின் நிழல் அமைப்பான, டி.ஆர்.எப்., இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மும்பையில், 2008ல் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட காரணமாக இருந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியதும், லஷ்கர் - இ - தொய்பா தான்.
சமீபத்திய தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி களமாக உள்ள அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக துாதரக ரீதியாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதாவது, 60 ஆண்டுக்கு மேற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; துாதரக ரீதியான உறவுகள் குறைப்பு; வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அத்துடன், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் அரசும், 1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிம்லா ஒப்பந்தம் உட்பட, பல ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, 'பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு தரும் மோசமான வேலையை, பல ஆண்டுகளாக, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக செய்து வருகிறோம்' என்று, அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
இதிலிருந்தே, பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது என்பதை அறியலாம். எனவே, அந்நாட்டை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்துவதையும், பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டியதையும் உறுதி செய்வதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. அதை மிகச்சிறந்த முறையில், மத்திய அரசு செய்ய வேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
மேலும், மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, தங்கள் முழு ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துஉள்ளனர்.
அதேநேரத்தில், படுகொலையை செய்த பயங்கரவாதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அப்போது தான் சதித்திட்டம் மற்றும் பின்னணியில் உள்ள பயங்கரவாத அமைப்பு களின் தொடர்பு பற்றிய முழு விபரங்கள் வெளிச்சத்திற்கு வரும். இது ஒருபுறம் இருந்தாலும், பஹல்காம் சம்பவத்தை பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் மதவெறி கருத்துகள் மற்றும் எரிச்சலுாட்டும் கருத்துகளை தெரிவிக்காமல் இருக்க வேண்டியதும் அவசியம்.
தற்போதைய நிலையில், பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய கடும் அழுத்தத்தை, மத்திய அரசு எதிர்கொள்கிறது. ராஜதந்திர ரீதியாகவும், சர்வதேச அரங்கிலும் பாகிஸ்தானை அம்பலப்படுத்த கிடைத்த சரியான வாய்ப்பு, பஹல்காம் தாக்குதல் சம்பவம். எனவே, அந்நாட்டை உலக நாடுகள் எல்லாம் புறக்கணிக்கும் அளவுக்கு, தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பாகிஸ்தானின் பொருளாதாரம், தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. ஐ.எம்.எப்., உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியையே, அந்நாடு பெரிதும் நம்பியுள்ளது. அந்த உதவிகளும் கிடைக்காமல் தடுப்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.