தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு மத்திய அரசுக்கு களங்கமே!

 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு மத்திய அரசுக்கு களங்கமே!

 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு மத்திய அரசுக்கு களங்கமே!


PUBLISHED ON : மே 18, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2026 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த, 3ம் தேதி நாடு முழுதும் நடந்த, 'நீட்' தேர்வு, வினாத்தாள் கசிவு புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை எனப்படும், என்.டி.ஏ., நடத்தி வருகிறது. 'இந்த தேர்வு முகமையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இந்த முகமையால் கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட 14 தேர்வுகளில், ஐந்துக்கும் மேற்பட்ட தேர்வுகள், வினாத்தாள் கசிவு உட்பட பல புகார்களுக்கு ஆளாகியுள்ளன' என, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., திக்விஜய்சிங் தலைமையிலான, கல்வி, பெண்கள், குழந்தைகள் விவகாரம் தொடர்பான பார்லிமென்ட் குழு, ஆறு மாதங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தது. அது உண்மையே என்பதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் வினாத்தாள் கசிந்து, தேர்வு ரத்தாகி உள்ளது.

நாடு தழுவிய அளவிலான தேர்வுகளை நடத்துவதன் வாயிலாக, கடந்த ஆறு ஆண்டுகளில், தேசிய தேர்வு முகமைக்கு, 3,513 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் வந்துள்ளதாகவும், அதில், 3,065 கோடிகள் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளதாகவும், உபரி நிதியாக, 448 கோடி ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்த பார்லிமென்ட் குழு, அந்த நிதியை தேர்வு முகமையின் செயல்பாடுகள், அதன் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த செலவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனாலும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

'நீட்' தேர்வுக்கு எதிராகவும், அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இன்று வரை எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வினாத்தாள் கசிவு உட்பட பல புகார்கள், தேசிய தேர்வு முகமை மீது கூறப்படுவது, முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளை கேலிக்கூத்தாக்குவது போல உள்ளது.

நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், 1.30 லட்சம் மாணவர்களை சேர்ப்பதற்காக, நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும், இந்த தேர்வை எழுத, 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். பல மாதங்களாக இந்த தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களுக்கு, தேர்வு ரத்து என்பது, மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் தந்துள்ளது.

தேசிய அளவிலான தேர்வு முறைகளை மேம்படுத்தவும், மாநில அளவிலான மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை சீர் செய்யவும், ஒரு ஒருங்கிணைந்த தேசிய தளம் வேண்டும் என்பதற்காகவே, 2017ம் ஆண்டு தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டது.

இருப்பினும், இந்த அமைப்பு பல குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. 'இந்த அமைப்பின் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு, வினாத்தாள் கசிவு நிகழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்' என, மத்திய அரசு உறுதி அளித்திருந்தாலும், இதுவரை அந்த உறுதிமொழியை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுளை நிவர்த்தி செய்வதற்கான பாடத்தையும், தேர்வு முகமை கற்றுக் கொள்ளவில்லை என்பதையே, சமீபத்தில் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து சுட்டிக்காட்டுகிறது.

தேசிய தேர்வு முகமையின் தற்போதைய நிர்வாக ரீதியான தோல்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் மட்டுமின்றி, முகமையில் அனைத்து மட்டத்தில் பணியாற்றுவோரும் பொறுப்பேற்க வேண்டும். வினாத்தாள் கசிவில் பங்கெடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நம் நாடு தொழில்நுட்ப ரீதியாக, பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, வரும் காலங்களில், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, சரியான தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும். மனித தவறுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். நீட் தேர்வு உட்பட பல தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது அவசியம். மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us