தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/தெருநாய்கள் தொல்லை: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி!

தெருநாய்கள் தொல்லை: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி!

தெருநாய்கள் தொல்லை: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி!


PUBLISHED ON : மே 25, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2026 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுதும், 60,000-க்கும் அதிகமானோர், வெறிநாய்கள் மற்றும் ஆபத்தான தெருநாய்களால் கடிக்கப்பட்டு, 'ரேபிஸ்' பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு, 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். நாடு முழுதும், ஆண்டுக்கு 1.5 கோடிக்கும் அதிகமானோரும், தமிழகத்தில், 4.8 லட்சம் முதல் 5.25 லட்சம் பேர் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

தெருநாய்க்கடி சம்பவங்களால், நாடு முழுதும் ஏராளமான சிறுவர்களும், முதியவர்களும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் அடிக்கடி பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கியது.

அதில், 'பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போட்ட பின் அல்லது கருத்தடை செய்த பின், மீண்டும் அதே இடங்களில் விடக்கூடாது. அவற்றை பராமரிக்க பிரத்யேக காப்பகங்கள் அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதாவது, தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தவும், அவற்றை கருணைக் கொலை செய்யவும் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவுகளில் திருத்தம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும், மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநில அரசுகள் உரிய மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தி, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதாவது, 'வெறி பிடித்த, குணப்படுத்த முடியாத நோய் பாதித்த அல்லது வெளிப்படையாகவே ஆபத்தான, ஆக்ரோஷமான நாய்கள், இருந்தால், அவற்றை கருணைக்கொலை செய்ய, சட்டப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என்றும் அறிவுறுத்தியது.

அரசியல் சட்டப்பிரிவு, 21-ன் கீழ் மனித உயிரை பாதுகாப்பதற்கான அரசின் கடமையை, 'விலங்குகள் மீதான இரக்கம் மீற முடியாது' என்றும், உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதாவது, மனிதர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டியுள்ளது.

தெருநாய்களை பராமரிக்க காப்பகங்களை உருவாக்குவது போன்ற, உச்ச நீதிமன்றத்தின் சில நிபந்தனைகள் கடினமானவை என்பது உண்மையே. ஆனாலும், கட்டுப்பாடற்ற தெருநாய்களின் எண்ணிக்கையை சமாளிக்க, உறுதியான நடவடிக்கை தேவை என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய, முழு நேரமும் செயல்படும், ஒரு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையத்தை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இந்த தீர்ப்பில், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு மற்றும் பிற விபரங்கள் குறித்து தெளிவு இல்லை.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு தரப்பினரின் நிர்வாக குறைபாடுகளால் தான் தெருநாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ளன என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. சமீபத்திய தீர்ப்பின் வாயிலாக, உச்ச நீதிமன்றம் இந்த சிக்கலை தீர்க்க முற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே.

எனவே, 2023ம் ஆண்டு அறிமுகமான விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளை, அனைத்து மாநில அரசுகளும், உறுதியாக பின்பற்ற வேண்டும். தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் கருத்தடை செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், தெருநாய்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதன் வாயிலாக, மனிதனின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எனவே, தெருநாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த, தமிழக அரசும் விரிவான திட்டம் ஒன்றை செயல்படுத்த முன்வரும் என, எதிர்பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us