UPDATED : ஆக 24, 2026 02:57 PM
ADDED : ஆக 22, 2026 05:00 PM

'நோயும் வறுமையும் ஒரு மனிதனின் உடலை வேண்டுமானால் முடக்கலாம்; அவனது கனவுகளையோ, பிள்ளைகளின் எதிர்காலத்தையோ ஒருபோதும் வீழ்த்த முடியாது' என்ற வைராக்கியத்துடன் வாழும் பெற்றோரில் ஒருவர்தான், பெருமாநல்லுாரைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி மச்சகேந்திரன்.
வாடகை வீட்டில் வசித்து, வெல்டிங் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் இவரது மகள் செல்வராணி, ஈட்டிவீரம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 1,330 திருக்குறள்களையும் 37 நிமிடம் 46 விநாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்து, 'ஆல் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்' உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஏற்கனவே கோவை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பிலும்,
கடலுார் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் திருக்குறள் முற்றோதல் செய்து
செல்வராணி பாராட்டு பெற்றுள்ளார்.
அடுத்ததாக, திருக்குறளை
பொருளுடன் கற்கவும், 'தொல்காப்பியம்' பயிலவும் பெற்றோர் தயார்படுத்தி
வருகின்றனர். தமிழ் வழியில் பயின்று ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பதே
செல்வராணியின் லட்சியம்.
அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டே, தமிழை
மூச்சாக சுவாசித்து ஐ.ஏ.எஸ்., கனவுடன் பயணிக்கும் இந்தச் சிறுமியின்
எதிர்காலத்துக்கு, நல் உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டினால்… அந்தக் கனவுப்
பயணத்துக்கு அது பெரிய துணையாக அமையும்.
டிவி, போன் தவிர்த்து கதை சொன்னோம்
நாங்கள் சாதாரண குடும்பம். வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். வெல்டிங் வேலை செய்துதான் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். பெரிய பையன் கல்லுாரியில் படிக்கிறார். எனக்கு இதயப் பிரச்னை இருப்பதால், ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதற்கான வசதியும் இல்லை. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என்ற பயம் அடிக்கடி வரும். அதற்குள் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான் ஆசை.
நானும் என் மனைவியும் 10ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறோம். ஆனால், இருவருக்குமே தமிழ் மீது அதிக ஆர்வம். மகளுக்கும் தமிழ் பிடிக்கும் என்பதால் திருக்குறளை சொல்லிக் கொடுத்தோம். என் மனைவிதான் அவளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தார்.
'டிவி', செல்போன் பார்க்க விடாமல், நிறைய கதைகளை சொல்லிக் கொடுத்தோம். அவளும் ஆர்வமாக கேட்பாள். படிப்பில் கவனம் செலுத்தியதால், திருக்குறள்களை வேகமாக மனப்பாடம் செய்து, 37 நிமிடங்களில் 1,330 குறள்களையும் சொல்லி உலக சாதனை படைத்துவிட்டாள்.
என் மகள் தமிழால் உயர்ந்து நிற்பாள் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வந்துவிட்டது.
- செல்வராணியின் தந்தை மச்சகேந்திரன்.
