/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
முன் ஜென்ம ரகசிய கதவை மெல்ல திறக்கும் புத்தகம்
/
முன் ஜென்ம ரகசிய கதவை மெல்ல திறக்கும் புத்தகம்
UPDATED : ஜன 25, 2026 06:54 AM
ADDED : ஜன 25, 2026 05:20 AM

வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். ஸ்ரீ எம் எழுதிய- 'இமய குருவின் இதய சீடன்' (Apprenticed to a Himalayan Master) என்ற நுால் குறித்து, கோவை மண்டல் ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் மணிமோகன், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்து மதத்தின் மீது பக்தியும், பற்றும் கொண்டவர்கள், ஒரு கட்டத்தில் ஆன்மிக மார்க்கத்தை தேர்ந்தெடுத்து, இறை வழிபாட்டில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, வாழ்வின் இறுதி வரை அதை நோக்கி பயணிப்பார்கள்.
இதில் சிலர் முழுமையாக துறவு நிலையை ஏற்று, ஞான நிலையை நோக்கி பயணப்படுவதுண்டு. இந்த பயணத்தில் எல்லோரும் ஞானத்தை அடைந்து விடுவதில்லை. சிலர் மட்டும் ஜென்ம பலனாக அதற்கான பாக்கியத்தை பெறுகின்றனர்.
அப்படிப்பட்ட ஞானிகள் பலர், நம் தேசத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து இறைப்பணியை செய்து மறைந்துள்ளனர். இன்றைக்கும் இமயமலையில் பாபாஜி போல் பலர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் யோகி ஸ்ரீ எம் என்ற மது. தனது சிறு வயதில் இருந்து ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு ஞான மார்க்கத்தை தேர்ந்தெடுத்தவர்.
இவரது சுய சரித நுால்தான் இது. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் இந்த நுாலை வாசிக்கும் போது, ஆன்மாவில் வெளிச்சம் பிறக்கிறது. மனதுக்குள் மூடிக்கிடக்கும் ஞானக்கதவுகள் திறக்கின்றன.
ஸ்ரீ எம் திருவனந்தபுரத்தில், 1948ம் ஆண்டு இஸ்லாமிய குடுப்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் மும்தாஜ் அலி கான். ஆனால் சிறு வயதில் இருந்து இந்து மத வழிபாட்டிலும், யோக முறையிலும் நாட்டம் கொண்டவராக இருக்கிறார்.
தன் முன் ஜென்மத்துக்கும், இந்த ஜென்மத்துக்கும் தொடர் இருப்பதாகவும், தனது குரு தன்னை தேடிக்கொண்டு இருப்பதாகவும் உணர்கிறார். அதனால் 19ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி குருவைத்தேடி இமயமலைக்கு செல்கிறார்.
குரு கிடைக்காமல் மனம் நொந்து வாழ்வையே மாய்த்துக்கொள்ள கங்கையில் குதித்த அந்த இளைஞரை, ஒரு பாபாஜி காப்பாற்றி அழைத்துச் சென்று சீடனாக ஏற்றுக்கொண்டு, யோக நெறிகளை கற்றுக்கொடுக்கிறார்.
பிறகு அவனுக்கு, 'முன் ஜென்மத்தில் யாராக இருந்தாய்' என்ற பிறப்பின் ரகசியத்தை விளக்குகிறார். முன் பிறவியில் அவன் மது என்ற பெயரில் வாழ்ந்ததால், குரு அவனை மது என்றே அழைக்கிறார்.
வியாச குகையில் வைத்து மகா அவதார் பாபாஜியை காணும் பாக்கியம் மதுவுக்கு கிடைக்கிறது. வேதாந்த சாஸ்திரங்கள் யோகா பயிற்சிமுறைகள் மட்டும் இல்லாமல், பல்வேறு உலகங்களுக்கும் செல்லும் அனுபவமும் பயிற்சியும் பெற்றது பற்றி, இந்த புத்தகம் விரிவாக கூறுகிறது.
இப்போது ஸ்ரீ எம் என்ற பெயரில், யோகி மதனப்பள்ளியில் (satsang foundation) என்ற அமைப்பை உருவாக்கி ஆன்மிகப்பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு, 2020ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆன்மிக தேடலும், இறை வழிபாட்டில் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த நுாலை வாசித்தால் புதிய தரிசனங்களை பெறலாம்.
ஸ்ரீ எம் திருவனந்தபுரத்தில், 1948ம் ஆண்டு இஸ்லாமிய குடுப்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் மும்தாஜ் அலி கான். ஆனால் சிறு வயதில் இருந்து இந்து மத வழிபாட்டிலும், யோக முறையிலும் நாட்டம் கொண்டவராக இருக்கிறார். தன் முன் ஜென்மத்துக்கும், இந்த ஜென்மத்துக்கும் தொடர் இருப்பதாகவும், தனது குரு தன்னை தேடிக்கொண்டு இருப்பதாகவும் உணர்கிறார்.

