தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ பாலக்காடு பக்கத்திலே ஒரு திருக்குறள் பாட்டி

பாலக்காடு பக்கத்திலே ஒரு திருக்குறள் பாட்டி

பாலக்காடு பக்கத்திலே ஒரு திருக்குறள் பாட்டி


ADDED : மார் 30, 2025 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 03:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொன்மைத் தமிழில் தோன்றிய இலக்கியங்கள் எத்தனையோ ஆயிரங்கள், பாயிரங்கள், காவியங்கள், புராணங்கள், இலக்கணங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிலும் ஆழ்ந்த கருத்துக்களால் ஆளுமை மிக்கதாக விளங்குவது சாட்சாத்... சந்தேகமேயில்லை, அது திருக்குறள்தான்.

இதற்கு உரையெழுதியும், விமர்சனம் செய்தும், மொழிபெயர்த்தும், ஆய்வு செய்தும், பாயிரம் பாடியும் சென்றுள்ளனர் பலர். இந்த வரிசையில் 86 வயதில் மலையாளத்தில் மொழியாக்கம் செய்து குறளை மேலும் மேன்மைப்படுத்தியுள்ளார் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி ராதா.

தள்ளாத வயதாயினும், தளராத முயற்சி கொண்ட ராதா, திருக்குறள் மீதுள்ள காதலால், மலையாள மொழிபெயர்ப்பு புத்தகத்தை நம்மூர் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மூலம் அண்மையில் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளார்.

இவரது வயதில் பலருக்கு சற்றுமுன் சாப்பிட்டதுகூட சட்டென ஞாபகத்திற்கு வருவதில்லை. ஆனால் தெளிந்த நீரோடையாக கருத்துடன் பேசும் ராதா, இதற்கென காலை, மாலை நேரம் ஒதுக்கி எழுதி, எழுதி 6 மாதங்களில் 1330 குறள்கள், அதற்கு உரையை மலையாளத்தில் எழுதியது சாதாரண சாதனையல்லதானே. இதுபற்றி அவர் சொல்வது நம்மை பிரபஞ்சம் அளவு பிரமிக்க வைக்கிறது.

சாதிக்க நினைப்போருக்கு வயது ஒரு பொருட்டேயில்லை என்பதை நிரூபிப்பது போல, இவர் எழுதத் துவங்கியதே 2008ல் 70 வயதுக்குப் பின்புதானாம். அதிகளவு புத்தகம் படித்ததில்லை. பள்ளிக் கால புத்தகங்கள், வாழ்க்கை வழியில் கிடைத்த புத்தகங்கள், நாளிதழ்களை படித்து தெளிவு பெற்றுள்ளார். கணவர், தந்தை இறந்தபின் மகள், மகனுடன் மும்பை, சவுதிஅரேபியா என 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிமாநிலம், வெளிநாட்டில் வசித்தபோது ஆன்மிக பயணமாக பல இடங்களுக்கும் சென்றுள்ளார்.

அந்த அனுபவங்களை பாலக்காட்டில் வெளியான 'நிர்மால்யம்' என்ற காலாண்டு புத்தகத்தில் எழுதியுள்ளார். இவரது 84 வயது பிறந்தநாளை உறவுக்கூட்டம் கோலாகலமாக கொண்டாடியது. அப்போது இவர் எழுதியதை 'யாத்ரா விவரணம்' என படங்களுடன் புத்தகமாக்கி பரிசளித்தது பாசபந்தங்கள். அதில் நெகிழ்ந்து போனார் எழுத்தாளினி ராதா.

கொரோனா காலத்தில் அவரது பேத்திகள் திருக்குறளை பரிசளித்துள்ளனர். சும்மா இருக்கும்போது அதை படித்த ராதாம்மா, அதை மலையாளத்தில் எழுதினால் என்னவென்று தோன்றவே, குறளையும், தனது உரையையும் மொழி பெயர்த்து எழுதினார். அதை நுாலகம், பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக தெரிவித்தார்.

இனி அவரே கூறுவதை கேளுங்களேன்: எனது தந்தை மணி ஐயர் சிறிய வயதிலேயே மதுரை மாவட்டம் திருமங்கலம் வந்து ஓட்டல் தொழில் நடத்தினார். எனது 5 வயது வரை திருமங்கலம், அதன்பின் 5 ஆண்டுகள் பாலக்காடு மாவட்ட கிராமங்களில் படித்து வளர்ந்தேன். பத்து வயதுக்குப் பின் மீண்டும் தந்தை திருமங்கலம் வந்தபோது இங்குள்ள அரசு பெண்கள் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தேன்.

பதினேழு வயதில் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் மதுரை நிருபர் அச்சுதானந்தனுடன் திருமணமானது. ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மும்பையில் மகள் வீட்டில் இருந்தபோது ஆன்மிக பயணமாக வடமாநிலங்களுக்கு அடிக்கடி சென்றேன். சவுதிஅரேபியாவில் மகனுடன் 15 ஆண்டுகள் வசித்தபோது இத்தாலி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா சென்று வந்துள்ளேன். அதுபோன்ற பயண அனுபவங்களை தொகுத்து வெளியிட்டேன்.

கொரோனா காலத்தில் திருக்குறளை படித்து கருத்துக்களில் மனதை பறிகொடுத்தேன். இதனை கேரள மக்களும் அறிய விரும்பினேன். பாலக்காடு பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர். மலையாள மக்களும் தமிழை நன்கு அறிவர். அதனால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பத்தினர் அளித்த ஊக்கமே இதற்கு காரணம். நான் எழுதிய பின் அதனை எடிட் செய்வது, பிழை திருத்தம் செய்வது, குறளின் 7 சீர்களை அச்சிடும்போதும் சில சிரமங்கள் இங்குள்ளோருக்கு ஏற்பட்டது. அப்போது இங்குள்ள விக்டோரியா கல்லுாரி பேராசிரியர் ஒருவர் உதவினார். திருக்குறளைப் படித்து பத்து பேர் வாழ்வில் கடைபிடித்தாலும் மகிழ்ச்சிதான் என்றார்.

தற்போது ஸ்காண்டிநேவியன் நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து பயண அனுபவங்களை எழுதி வருகிறேன். தொடர்ந்து எழுதுவேன் என்றார்.

இவரைப் பாராட்ட94971 36198.

திருக்குறளைப் படித்து பத்து பேர் வாழ்வில் கடைபிடித்தாலும் மகிழ்ச்சிதான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us