தற்கொலை எண்ணத்தை தகர்த்தெறிந்த 'தடகளம்': ஆசியளவிலான போட்டியில் பங்கேற்க காத்திருக்கிறார்
தற்கொலை எண்ணத்தை தகர்த்தெறிந்த 'தடகளம்': ஆசியளவிலான போட்டியில் பங்கேற்க காத்திருக்கிறார்
ADDED : ஆக 23, 2026 05:41 PM

குடும்ப சூழ்நிலையால் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட கலைமணி, பொருளாதாரம் ஒரு தடையல்ல என மராத்தானில் தொடர்ந்து சாதித்து வருகிறார்.
செல்வபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வரும் இவருக்கு 53 வயதாகிறது. தனது 17வது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் விளையாட்டு ஆர்வத்தை அவர் கைவிடவில்லை. 2004ம் ஆண்டு முதல் தடகள போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கலைமணியின் கணவர் அழகு, தேநீர் கடை நடத்தி வருகிறார். பெயருக்கு ஏற்ப, மனைவியின் விளையாட்டு ஆர்வத்துக்கு அவர், தடை போடாமல் முழு ஆதரவு அளிக்கும் அழகான மனதுக்கு சொந்தக்காரர்.
வீட்டு வேலை செய்யும் கலைமணி, தனது குடும்ப பொறுப்புகளுக்கு இடையே சாதிக்கும் முனைப்புடன், தடகள பயிற்சி பெற்று வருகிறார்.
சமீபத்தில் நடந்த மராத்தான் போட்டியில் 50 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 5 கி.மீ., துாரத்தை 25 நிமிடங்களில் கடந்து முதல் பரிசு தட்டியுள்ளார்.
இதற்கு முன்பு நடந்த 10 கி.மீ., மாரத்தான் போட்டியில் 54 நிமிடங்களில் நிறைவு செய்து முதல் பரிசும் வென்றுள்ளார்.
தவிடுபொடியானது தற்கொலை எண்ணம்! ''மராத்தான் போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு கட்டணத்தை செலுத்துவதற்குகூட பலமுறை சிரமப்பட்டுள்ளேன். சிலர் உதவியதால் போட்டிகளில் பங்கேற்க முடிந்தது. பல்வேறு பிரச்னைகளால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு ஏற்பட்டது.
ஆனால், குழந்தைகளை நினைத்து அந்த எண்ணத்திலிருந்து மீண்டேன். பெற்ற பதக்கங்கள், விருதுகளை பார்க்கும்போது மேலும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.
ஆசிய அளவிலான மராத்தான் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்கான கட்டணச் செலவு அதிகமாக இருப்பதால் பங்கேற்க முடியவில்லை,” என்ற கவலையில் இருக்கிறார் கலைமணி.
கலைமணிக்கு உதவ விரும்புவோர்: 97885 57004 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
