/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பரதமாடுங்கள்... பலமாகுங்கள்: பரவசம் தரும் சீதாபாலா
/
பரதமாடுங்கள்... பலமாகுங்கள்: பரவசம் தரும் சீதாபாலா
பரதமாடுங்கள்... பலமாகுங்கள்: பரவசம் தரும் சீதாபாலா
பரதமாடுங்கள்... பலமாகுங்கள்: பரவசம் தரும் சீதாபாலா
ADDED : செப் 07, 2025 10:33 AM

பத்து வயதில் கற்ற பரதக் கலையை பாரதம் மட்டுமின்றி இந்த பார் முழுதும் கடந்த முப்பது ஆண்டுகளாக கொண்டு சேர்த்து வருவதுடன் பரதநாட்டியம் குறித்து ஆராய்ச்சியையும் செய்து முடித்திருக்கிறார் மதுரை திருநகரைச் சேர்ந்த பரதக்கலைஞர் முனைவர் சீதாபாலா.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக பரதம் ஆடி வரும் சீதா, இருபதாண்டுகளுக்கும் மேலாக அதை பயிற்றுவித்தும் வருகிறார். இதற்காக ஜெயாலயா என்ற நாட்டிய பள்ளியையும் நடத்தி வருவதுடன் மதுரை தமிழக அரசு இசைக்கல்லுாரியில் பரதநாட்டிய பேராசிரியையாகவும் பணிபுரிந்து வருகிறார்.
ராணி வேலுநாச்சியார் உள்ளிட்ட பல நாட்டிய நாடகங்களையும் நடத்தி வருகிறார். தற்போது இவரிடம் பயின்ற பலரும் குருவை போலவே பரதக் கலையை பல இடங்களில் அரங்கேற்றி வருகின்றனர். நாட்டிய போட்டிகளில் நடுவராக பங்கேற்று வருவதுடன் பரதக்கலை குறித்து ஆராய்ச்சியையும் மேற்கொண்டு முடித்திருக்கிறார்.
மதுர கலாநிதி... நாட்டிய தாரகை... பாரத கலைமணி... என இவர் பெற்ற பட்டங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
தாளம், ஜதியுடன் முக அபிநயங்கள் பரதக்கலைக்கு முக்கியம். பாரத நாட்டின் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பரதக்கலையை வெளிநாட்டினரும் ரசிக்க தவறுவதில்லை. பரதக்கலைக்கே உரித்தான முத்திரைகள் அக்கலைக்கு மட்டும் சிறப்பு சேர்ப்பதில்லை. ஆடும் கலைஞர்களின் உடலுக்கும் பலம் சேர்க்கிறது என்கிறார் முனைவர் சீதா.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து....
உடல் நலம் பேண நடைபயிற்சியை போல நடனமும் சிறந்த உடற்பயிற்சி.
நடனமாடுவது மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் ஆடுவோருக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அமைந்து விடுகிறது. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க நடனம் அதிலும் பரதம் ஒரு சிறந்த உடற்பயிற்சி. மன உளைச்சல், மனச்சோர்வு, மன இறுக்கம், கோபம் போன்றவை குறைந்து மனதையும், உடலையும் புத்துணர்வாக வைக்க உதவுகிறது. கெட்ட சிந்தனைகளை வரவிடாமல் தடுக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. குறிப்பாக பரதக்கலையில் முத்திரைகளை பயன்படுத்தும் விதம் ஒவ்வொன்றும் அற்புதமான அதிசயங்களை தருகிறது.
வெளி உலகுக்கு அபிநயங்களை விளக்கினாலும் ஆழ்மனதில் ஒருமித்த எண்ணத்துடன் பிரயோகிக்கப்படும் முத்திரைகள், ஒரு நாட்டிய கலைஞருக்கு இயற்கையாகவே மனோபலம், ஆத்மபலம் பிரபஞ்ச சக்தியின் தொடர்பினை அதிகமாக ஏற்படுத்துகிறது. முத்திரையை பயன்படுத்தும் போது பக்தியுடன் பயன்படுத்தினால் பயனடையலாம்.
ஒரு விரல், இரு விரல், கண், தலை என தலை முதல் பாதம் வரை பலவிதமான முத்திரைகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி பரதமாடுவதால் உடல் கலோரிகள் அழிக்கப்படுகின்றன. ஒரு மணி நேரம் நடனமாடினால் 800 கலோரிகள் எரிந்து விட வாய்ப்புள்ளது. இசையுடன் சேர்ந்த நடனம் புத்துணர்வு தருவதுடன் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
எனவே பரதமாடுங்கள். உடல் பலமாகுங்கள்... மனம் லேசாகுங்கள்... என பரதக்கலையின் சிறப்புகளை விளக்கினார் சீதாபாலா.
இவரை வாழ்த்த 75400 62276.