ADDED : ஜூன் 22, 2025 02:06 AM

வாசிப்பை நேசிப்பவர்கள் பலர், தாங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம், டைனமிக் மல்டி மெட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜன், தற்போது தான் படித்துக் கொண்டிருக்கும், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, 'இன்றைய காந்தி' புத்தகத்தை பற்றி பேசுகிறார்...
''இந்த புத்தகத்தில், காந்தியை வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறார் ஜெயமோகன். காந்தியின் வாழ்க்கையில் இருந்தும், அவரது போராட்ட களத்திலிருந்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கான காரணங்களையும், விளக்கி இருக்கிறார்.
இந்திய தத்துவ மரபையும், மேற்கத்திய சிந்தனை மரபையும் ஏற்றுக்கொண்ட காந்தி, அகிம்சையை இந்த உலகத்துக்கான மாபெரும் தத்துவமாக முன் வைத்திருகிறார்.
இந்திய சுதந்திர போராட்ட கால கட்டத்தில், காந்தி மீது வைக்கப்பட்ட பல எதிர்மறையான விமர்சனங்களை, இந்த நுால் தர்க்க பூர்வமாக விளக்குகிறது.
காந்தியின் பார்வையில் ஒரு சாமானிய மனிதனும், இங்கிலாந்து ராணியும் ஒன்றுதான். அதனால்தான் அவரால் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ முடிந்திருக்கிறது.
காந்தியை தொடர்ந்துதான், சாதாரண மக்கள் அரசியல் களத்துக்கு வந்துள்ளனர். இன்றைக்கு காந்தியின் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றாலும் இந்திய ஜனநாயகமும், அரசியல் அமைப்பும் காந்தியத்தை உள்ளடக்கியதாகவே உருவாகி இருக்கிறது.
காந்தியின் சிந்தனைகள் இந்தியாவுக்கு மட்டுமானதல்ல, உலகம் முழுமைக்கான ஒரு தத்துவம் என்பதை, இந்த நுாலை வாசித்து முடிக்கும் போது உணர முடிகிறது.