UPDATED : ஜன 09, 2022 03:29 PM
ADDED : ஜன 09, 2022 06:50 AM

நெல்லையைச் சேர்ந்தவர் இசைக்கவி ரமணன். நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ் மீதும், தமிழ் இசை மீதும் தீரா பற்று கொண்டவர். பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர் நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அகில இந்திய வானொலியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தொடர்ந்து, பாடியும், பேசியும் மக்களை மகிழ்சிப்படுத்தி வரும் ரமணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.அவற்றிற்கு அவர் அளித்த பதில்கள் இதோ:
நீங்கள் பாடுவதிலும், பேசுவதிலும் வல்லவராக இருக்கிறீர்கள். பொதுவாக இரண்டும் சேர்ந்து அமைவது அரிதானது. உங்களுக்கு எப்படி சாத்தியமானது?
இதற்கு ஒரே பதில் தான். நான் 10 ஆண்டுகளாகத் தான் தமிழில் சொற்பொழிவுகள் செய்து வருகிறேன். ஆனால் 50ஆண்டுகளாக கவிதைகள் பாடிக்கொண்டு இருக்கிறேன். பாட்டு என் இயல்பு; பேச்சு இன்றைக்கும் ஒரு சவால்தான்!
புத்தகக் கடைக்குச் செல்கிறீர்கள். எந்தப் பக்கம் உங்கள் கவனத்தை அதிகம் ஈர்க்கும்?
ஆன்மிகம் சார்ந்த நுால்களை ஆர்வத்துடன் வாங்கிப் படிப்பதுண்டு. குறிப்பாக மகான்களின் வரலாறுகள் அதிகம் ஈர்க்கும்.
இந்தப் பணியை பொழுதுபோக்காகவே மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் உங்கள் உண்மையான பொழுதுபோக்கு தான் என்ன?
நான் மேலே சொன்ன இயல்பைக் காட்டிலும், எனக்கு தனியாக ஒரு பொழுதுபோக்கு தேவைப்படவில்லை. தொலைக்காட்சியில் விளையாட்டுகள், வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகள் பார்ப்பது பிடிக்கும்.
உங்கள் மனைவி, குடும்பம் பற்றி...
எனக்கு திருமணம் ஆகி 41 ஆண்டுகள் ஆகிறது. நிம்மதியான வாழ்க்கை. மனைவிதான் முதல் விமர்சகர், ரசிகை எல்லாம். இரட்டை மகன்கள் - தெய்வப் பிரசாதங்கள். அன்பான மருமகள்கள். இரண்டு பேரன்கள், ஒரு பேத்தி.
உங்களுக்கு பிடித்த, 10 பாடல்களை வரிசைப்படுத்தி சொல்லச் சொன்னால் உங்கள் தேர்வு?
1. அவனருளாலே அவன் தாள் வணங்கி
2. அந்தப் பெரியவாகிய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
3. நாளென் செயும்?
4. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
5. வாழ நினைத்தால் வாழலாம்
6. யார் சிரித்தால் என்ன?
7. மலர்ந்தும் மலராத
8. உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
9. கண்போன போக்கிலே கால் போகலாமா
10. வந்தநாள் முதல் இந்த நாள் வரை
வெளிநாடுகளில் உங்களுக்கான வரவேற்பு எப்படி?
நன்றாகவே வரவேற்கிறார்கள். பாசாங்கில்லாமல், வேடம் போடாமல் அன்புடன் பதில் அளித்தால், ஆர்வமாகக் கேள்விகள் கேட்கிறார்கள்.
மோசமாக அனுபவங்கள் ஏதேனும் உண்டா?
வெளிநாடுகளில் ஒன்றிரண்டு உண்டு. கயிலாய யாத்திரையில், எங்கள் வண்டி கொஞ்சம் பாதை தவறியபோது ஏற்பட்ட ஒரு அனுபவம் மறக்க முடியாதது.எங்கள் மீது பாய்ந்த சீன ராணுவ வீரர்கள்; அமெரிக்க விமான நிலையங்களில் காரணமில்லாத வெறுப்பு போன்றவை. மற்றபடி வாழ்க்கையில் நடந்து முடிந்த எதுவும் மோசமானதாகத் தெரிவதில்லை.
நீங்கள் நாடக மேடை கூட ஏறியிருக்கிறீர்கள். வெள்ளித்திரையில் உண்களைக் காண்பது எப்போது? பின்னணி இசை, அல்லது இசையமைப்பாளராகக் கூடிய வாய்ப்பு இருக்கிறதா?
நான் தமிழ் நாடக மேடைக்கு வரும்போதே எனக்கு வயது அறுபதாகி விட்டது. அதுவும் நான் விரும்பி நடக்கவில்லை. திரைப்படங்களில் பாடல்கள் எழுதலாமோ என்று நினைத்தேன். அதற்காக முயற்சி செய்யும் பொறுமை எனக்கில்லை. திரைப்படங்களில் நடிப்பதற்காக வந்த அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, வேர்க்கடலை கொறித்தபடி, மாட வீதியில் நிம்மதியாக நடந்து வரும் சுதந்திரம் எனக்குப் பெரிதாகப்படுகிறது.
அனைவருக்குமான உங்கள் புத்தாண்டுச் செய்தி...
பாரதியின் வாசகம் தான்!'இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டுதின்று, விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்தீமையெலாம் தொலைந்து போம் திரும்பி வாரா!'
