/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஏழைகளின் அறிவுக்கண் திறக்கும் முதியவர்
/
ஏழைகளின் அறிவுக்கண் திறக்கும் முதியவர்
ADDED : பிப் 15, 2026 06:15 AM

''கெட்டதை யோசிக்காத குணம், ஏழைகளுக்கு உதவும் மனம், உழைப்பில் மட்டுமே கிடைக்கும் பணம் ஆகியவை இருந்தால் எல்லோரும் செல்வந்தர்கள்தான்,'' என்கிறார் சுப்பிரமணியன். சொல்வதுடன், தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்தும் வருகிறார்.
சென்னை, விருகம்பாக்கத் தில் தன் குடும்பத்தினருடன் வசிக்கும் இவர், தெற்கு ரயில்வேயில் கண்காணிப்பாளராக பணியாற்றி, 25 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றவர்.
பத்தாம் வகுப்பை முடித்ததும் வறுமையால், ரயில்வேயில் எழுத்தாளராக சேர்ந்து, படிப்படியாக தலைமை எழுத்தர், சிக்னல் பிரிவு கண்காணிப்பாளராக உயர்ந்தவர்.
ஓய்வு பெற்றதும், தான் படித்த திருவண்ணாமலை மாவட்டம், போளூர் போர்டு உயர்நிலை பள்ளிக்கு சென்று, மர பெஞ்ச், நாற்காலிகள், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்களை வாங்கி தந்திருக்கிறார். அந்த செய்தி பக்கத்து ஊர் பள்ளிகளிலும் பரவி, கோரிக்கைகள் அதிகரித்தது.
கோரிக்கைகளை ஏற்று, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தமிழ், ஆங்கில இலக்கணம், அகராதிகள், அறிவியல், பொது அறிவு புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், பாய்கள், தட்டுகள், தலைவர்கள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட வண்ணப்பட சார்ட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.
தற்போது, 80 வயதைக் கடந்துவிட்டதால், வேலுார், திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில், குறிப்பிட்ட தொகையை வங்கியில் வைப்பு நிதியாக்கி சேவையை தொடர்கிறார்.
இந்தாண்டு மட்டும் விருகம்பாக்கம், போளூர், குருவிமலை, பெளாசூர், வணக்கம்பாடி, ராமபாளையம், கீழ்பென்னத்துார் உள்ளிட்ட ஊர் பள்ளி களுக்கு, 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்துள்ளார்.
இதுகுறித்து, சுப்பிரமணியன் கூறுகையில், ''கெட்டதை யோசிக்காத குணம், ஏழைகளுக்கு உதவும் மனம், உழைப்பில் மட்டுமே கிடைக்கும் பணம் ஆகியவை இருந்தால், எல்லாரும் செல்வந்தர்கள்தான்.
''சிறுவயதில், ஏழை மாணவர்கள், கல்வியையும், விளையாட்டையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தால், பின் செயற்கரிய செயல்களை செய்வர். அதற்கு என்னையும், என் ஓய்வூதியத்தையும் ஒரு கருவியாக்க உதவிய ஆண்டவனுக்கு நன்றி,'' என்கிறார் அடக்கத்துடன்.
- நமது நிருபர் -:

