இந்த நுாலை வாசிப்பவர்கள் எறும்புகளை காதலிப்பார்கள்
இந்த நுாலை வாசிப்பவர்கள் எறும்புகளை காதலிப்பார்கள்
UPDATED : மே 23, 2026 04:31 PM
ADDED : மே 23, 2026 04:30 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் கோவை சதாசிவம் எழுதிய 'எறும்புகளின் வரிசை கலைகிறது' என்ற நுால் குறித்து, எழுத்தாளர் நான்சி கோமகன், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சுறுசுறுப்புக்கும், சோர்ந்து போகாத உழைப்புக்கும் எறும்புக்கு இணை எறும்புதான். எறும்புகளை பற்றி நாம் அறிந்து கொள்ள ஒரு நல்ல நுாலை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் கோவை சதாசிவம்.
'என்றாவது நீண்ட வரிசையில் எல்லோருக்கும் கடைசி ஆளாக நின்றிருக்கிறீர்களா? மெதுவாக நகரும் வரிசையின் மீது எரிச்சலும், வெறுப்பும் ஏற்பட்டுள்ளதா? அப்படியானால் நீங்கள் முழுமையாக இந்த நுாலை படிக்கலாம்' என்று துவங்குகிறது இதன் முதல் அத்தியாயம்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டில் துவங்கி, இயற்கை ஆர்வலர்களை காட்டுக்குள் அழைத்து சென்ற அனுபவங்கள் வரை, இந்த நுாலில் பதிவு செய்திருக்கிறார்.
எறும்பு, துாங்கிக் கொண்டிருந்தவரின் காதுக்குள் புகுந்து விடுகிறது. கொஞ்ச நேரத்தில் எறும்பாக மாறும் அவர் பார்ப்பதும், எறும்புகளோடு இருந்து தெரிந்து கொள்வதையும், எறும்பு பற்றி நாம் அறியாத அத்தனை தகவல்களையும் ஒரு கதை போல் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் நுாலாசிரியர்.
உலகில், 15 ஆயிரம் எறும்பு வகைகள் உள்ளன என்றும், மரங்கொத்தி, எறும்பு புற்றுக்குள் அதன் முட்டையை இட்டு எறும்புடன் இணைந்து வாழ்கிறது என்றும், நம் நாட்டு உழவர்களுக்கு மண்புழு நண்பனாக இருப்பது போல, கியூபா நாட்டு உழவர்களுக்கு நண்பனாக உள்ளது போன்ற தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.
ஒரு எறும்பு தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை துாக்கிச் செல்கிறது. நியூட்டனின் விதி எறும்புக்கு தெரிந்தது போல், புவியீர்ப்பு விசைப்படி எறும்புகள் துாக்கிச் செல்லும் பொருளை கீழ்நோக்கி துாக்கி செல்கிறது.
அதே நேரத்தில் எடை குறைந்த பொருளை துாக்கியபடி மேல் நோக்கி செல்கிறது. எறும்புகள் பின்பற்றும் இந்த விதி, நியூட்டனுக்கு முன்பே தெரிந்து இருக்கிறது.
எறும்புகள் முன்புறம், பின்புறம் மேற்புறமாக ஒரு பொருளை நகர்த்துவது இயற்பியல் விதிப்படி எடையை இழக்க செய்வதையும், இந்த நுால் மிக அழகாக விளக்குகிறது. நேராக செல்லும் எறும்புகள், கலைவது ஏன் என்பது பற்றியும் சொல்கிறார் நுாலாசிரியர்.
இது மட்டுமல்ல இன்னும் இயற்கை சார்ந்து பல அரிய தகவல்களை இந்த நுாலில் வாசிக்கலாம். மொத்தத்தில், இந்த நுாலை படிப்பவர்கள், எறும்புகளை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
