ADDED : மே 17, 2026 08:24 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் சினிமா இயக்குனர் லிங்குசாமி எழுதிய, 'செல்பி எடுத்துக்கொள்கிறது மரம்' என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பு குறித்து, கவிஞர் சுந்தரராமன் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இயக்குனர் லிங்குசாமி எழுதிய 'செல்பி எடுத்துக்கொள்கிறது மரம்' என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பை, சொற்களால் வரையப்பட்ட நவீன ஓவியங்கள் என்று சொல்லலாம்.
ஒரு சினிமா இயக்குனருக்கே உரிய 'விஷுவல்' நேர்த்தியோடு, மிகக் குறைந்த சொற்களில் இந்த பிரபஞ்சத்தை ஹைக்கூ கவிதைக்குள் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
திரைப்படங்களில் பிரம்மாண்டங்களைப் படைத்த இவர், 'ஹைக்கூ' என்னும் நுண்ணிய உலத்துக்குள் ஒரு வாமனனைப் போல தடம் பதித்திருக்கிறார்.
குழந்தைகள் விளையாடும் மரத்தடியில்
பழத்தை நழுவ விடுகிறது அணில்!
- என்ற இந்த கவிதையில் கவிஞர் ஒரு காட்சியைச் சொல்லவில்லை, ஒரு பகிர்வைச் சொல்கிறார். அணில் இங்கே ஒரு சக தோழனாக மாறிப்போகிறது.
இலையின் நுனியில் வழியும் மழைத்துளியில் செல்பி எடுத்துக்கொள்கிறது மரம்!
- இந்த கவிதையில் காலத்தின் மாற்றத்தை கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் லிங்குசாமி.
'கூழாங்கல்லில் தெரிகிறது நீரின் கூர்மை' என்ற கவிதையில் மென்மையான நீர் எப்படி கடினமான கல்லையும் செதுக்குகிறது என்ற வாழ்வியல் தத்துவத்தை, இரண்டு வரியில் சொல்கிறார்.
'நீ ஐந்து முக விளக்கை ஏற்றிக்கொண்டு வருகையில் ஏழு சுடர்' என்கிறார்.
விளக்கின் ஐந்து சுடர்களோடு, ஏந்தியவளின் இரு கண்களையும் சேர்த்து 'ஏழு சுடர்' என்ற அவரின் கற்பனை அபாரமாக உள்ளது.
ஒரு திரைப்பட இயக்குனருக்கே உரிய ரசனை மிகுந்த 'க்ளோஸ்-அப்' காட்சி இது. ஹைக்கூ என்பது அழகியலை நம் மனதுக்கு படம்பிடித்து காட்டுவதாகும்.
அது லிங்குசாமியின் ஹைக்கூ கவிதைகளில் மிக சிறப்பாக அமைந்துள்ளன. சொற்களைச் சிக்கனமாகச் செலவு செய்து, சிந்தனையைத் தாராளமாகத் துாண்டிவிடும் இக்கவிதைகள், என் மனத்திரையில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கின்றன.
சொற்களைச் சிக்கனமாகச் செலவு செய்து, சிந்தனையைத் தாராளமாகத் துாண்டிவிடும் இக்கவிதைகள், என் மனத்திரையில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கின்றன.
