/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
காரிலேயே உலகைச் சுற்றி வரும் தமிழ்ப் பெண்
/
காரிலேயே உலகைச் சுற்றி வரும் தமிழ்ப் பெண்
பிப் 22, 2025

காரிலேயே உலகைச் சுற்றி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த மீனாட்சி அரவிந்த் ஜெத்தா வந்தார்.
இவர் தமிழகத்தின் திண்டுக்கல்லில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், கர்ப்பப்பை புற்று நோய்க்கான தடுப்பூசி குறித்த இளம் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறக்கட்டளையின் செயல் உறுப்பினராகவும், கார் ஓட்டுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவராகவும் பன்முகத் திறமை கொண்ட அவர், உலகம் முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
2017 ஆம் ஆண்டில், கோயம்புத்தூரிலிருந்து இலண்டனுக்கு கார் பயணத்தைத் தொடங்கி, 24 நாடுகள் அதாவது 26,800 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 72 நாட்களில் கடந்து சென்றவர். சாகச பயணத்தின் மீதான அவரது காதல் அத்துடன் தீரவில்லை. தன்னைப் போன்ற கார் பயண ஆர்வலர்கள் எட்டுப் பேர் கொண்ட குழுவுடன் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு, 52 நாட்களில் 21,000 கிலோமீட்டர் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்.
சாத்தியமற்றதை சாதிக்கத் துடிக்கும் சாகச மனப்பான்மையுடய சாதனைப் பெண் மீனாட்சி அரவிந்த் இதுவரை 72 நாடுகள் காரில் பயணம் செய்துள்ளார். சாலையில் பயணிக்கும் போது சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு இரவும் வெவ்வேறு தங்குமிடங்களில் ஓய்வெடுத்தும், கணிக்க முடியாத இயற்கையின் மாற்றங்களுக்கு தன்னைத்தானே பக்குவப்படுத்திக் கொண்டு, மாறுபட்ட உணவு வகைகளை சாப்பிட்டும், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நபர்களை சந்திப்பது என எதிர்பாராத சூழல்களுக்கு அவர் தன்னைத்தானே பழக்கப்படுத்திக் கொண்டு சாதித்து வருகிறார்.
இந்த சாகசப் பயணங்கள், தடைகளை தகர்த்து, எல்லைகளைக் கடந்து, இடது கை மற்றும் வலது கை வாகனம் ஓட்டுவது, பல்வேறு நாடுகளில் சாலை விதிமுறைகளை புரிந்து கொள்வது என சவாலான பல அனுபவங்களை அவருக்கு பெற்றுத் தந்து இருந்தது என்கிறார்.
குறிப்பாக, மைனஸ் 16°C குளிர் படர்ந்த பரந்த பாலைவனங்கள் வழியாக பயணம், 16,000 அடி உயரத்தில் உள்ள குவஹாத்தியில் இருந்து இம்பால் போன்ற கடினமான கரடுமுரடான நிலப்பரப்புகள் என்று அவர்கள் குழு தொடர்ந்து பயணிக்கிறது. பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கவும், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும், ஒரு நாள் தொடர்ந்து 6 மணி நேரம் மட்டும்தான் பயணிக்கிறார்கள். ஒரே நாளில், அவர்கள் 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தங்கள் பயணத்தை தொடங்கி, வெப்பநிலை மைனஸ் 16 டிகிரி செல்சியஸாக வீழ்ச்சி அடைந்த இடங்களை அடைந்து இருக்கிறார்கள்.
சவூதி அரேபியா நாட்டுக்கு வரவேண்டும் என்ற அவர்களின் நீண்ட நாள் ஆசை, பிப்ரவரி 17 அன்று ஜெத்தாவுக்கு வருகையால் அது நிறைவேறியது. பிப்ரவரி 17 தேதி அன்று பாலசுப்ரமணியன் ராஜலட்சுமி, காஷிஃப் பேஷதி முகுந்த், ருத்ரா பிஸ்வாஸ், ஸ்மிருதி பெல்லாட், ஹேமகோனா, ராதிகா கிரிஷ், ஷிபா பர்வார், சுனிதா ஜமால், விஜிஷ்ரீ விஜயகுமார் மற்றும் ஜெயபராதன் ஜொனாதன் ப்ரீத் என 12 பேர் கொண்ட குழு ஜெத்தா வந்தடைந்தது. அவர்களை ஜெத்தா தமிழ் சமூகத்தினர் அன்புடன் வரவேற்றனர். பின்பு, இந்திய துணைத்தூதர், H.E ஃபஹத் அகமது கான் சூரி அவர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய துணை தூதர் தனது அலுவல்களுக்கு மத்தியில், அவர்களுடன் உரையாடி, நல்லெண்ணப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்த சவுதி அரேபியா பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக அல் உலா, தபுக், ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்குச் செல்லவும் அதன்பின் இந்தியா திரும்பவும் இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.
- நமது செய்தியாளர் M.Siraj
Advertisement