
மதுரை மாவட்டம், ச.மேலப்பட்டி, எம்.கே.விசாலா மேல்நிலைப் பள்ளியில், 1974ல், 8ம் வகுப்பு படித்தேன். வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுப்பேன். எங்கள் பள்ளியில், பெண்கள் 60 பேரும், ஆண்கள் 150 பேரும் படித்தோம்.
எங்கள் பள்ளியில் ஜனநாயக அரசியல் பாடத்தை நடைமுறைபடுத்தியவர், தலைமை ஆசிரியர் சீனிமுத்து. இரு மாதங்களுக்கு ஒருமுறை, பள்ளியில் தேர்தல் நடக்கும்.
பிரதமர் பதவிக்கு, இரு மாணவர்களை வழிமொழிய வேண்டும். அதிக ஓட்டு பெற்றவருக்கு, பிரதமர் பதவி வழங்கப்படும். பிரதமராக பதவி ஏற்கும் மாணவர், உடனடியாக உணவுத்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்களாக, தங்களின் சக மாணவர்களை நியமிக்க வேண்டும்.
உணவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்படும் மாணவர், உணவுக் கூடம், சாப்பிடும் தட்டுகள் சுத்தமாக இருக்கும்படி கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்படுபவர், பள்ளி வளாகம் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர்களை, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்பது, பிரதமராக தேர்வான மாணவரின் கடமை. இதில் தவறு நேர்ந்தால், அடுத்த இரு மாதங்களில் நடக்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாணவர், மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒரு சமயம், பிரதமர் பதவிக்கு என் பெயரை வழிமொழிந்தான், வகுப்பு தோழன். அந்த தேர்தலில் எனக்கு, 140 ஓட்டுகளும், எனக்கு எதிராக போட்டியிட்ட மாணவருக்கு, 70 ஓட்டுகளும் கிடைத்தன.
அப்போது, 'பள்ளி சரித்திரத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயக்கொடி வெற்றி பெற்றுள்ளான்' என்று, தலைமை ஆசிரியர் வாழ்த்துக் கூறியது, மனதில் பசுமரத்தாணியாக பதிந்துள்ளது.
தற்போது என் வயது, 65. கதர் துறையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். விவசாயம் செய்கிறேன். தேர்தல் நேரத்தில் என் குடும்பத்தாரிடம் இந்நிகழ்வை பகிர்ந்து கொள்வேன்.
ஜனநாயகம் குறித்து பள்ளிக்காலத்திலேயே கற்றுத்தந்த தலைமை ஆசிரியர் சீனிமுத்து, இப்போதும் என் மனக் கண்களில் காட்சியளிக்கிறார்.
- மா.ஜெயக்கொடி, மதுரை. தொடர்புக்கு: 97900 61014

