
கரூர், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1966ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர், மாசிலாமணி. என் அப்பா அந்தோணி முத்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
தேர்வில், பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக, உயர் படிப்பை தொடர முடியாமல் தவித்தேன். என்னுடைய படிப்பு ஆர்வத்தை புரிந்து, என் பாட்டியிடம் சம்மதம் பெற்று, மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த, திருச்சி, புனித ஜோசப் கல்லுாரியில் சேர்க்க அழைத்து சென்றார், தலைமை ஆசிரியர்.
திருச்சியில், அவரது உறவினர் வீட்டில் இரவு தங்கி, காலையில் கல்லுாரிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தார். நாங்கள் சென்ற சமயம், உறவினர் அவசர வேலையாக வெளியூர் சென்று விட்டதால், அங்கு தங்க முடியவில்லை. திருச்சி ரயில் நிலையத்தில் இரவு பொழுதை கழித்து, காலையில் கல்லுாரி செல்ல முடிவெடுத்தார், தலைமை ஆசிரியர்.
நடைமேடையில் படுத்து உறங்குவது எனக்கு பிரச்னையில்லை. இருப்பினும், ஏழை மாணவனுக்காக, தலைமை ஆசிரியரும் நடைமேடையில் படுத்து உறங்கியது, இன்றளவும் என்னால் மறக்க முடியாது.
திட்டமிட்டபடியே காலையில், பி.யூ.சி.,சேர்த்து விட்டார். மேலும், கல்வி மற்றும் விடுதி கட்டண சலுகைகளையும் பெற்று தந்தார். அதே கல்லுாரியில், எம்.எஸ்சி., வேதியியல் முடித்தேன். திருச்சி மண்டல பொறியியல் கல்லுாரியில், பகுதி நேர ஆய்வு மாணவனாக சேர்ந்து, தேர்ச்சி பெற்று, முனைவர் பட்டமும் பெற்றேன்.
திருச்சி, உருமு தனலட்சுமி கல்லுாரியில் பணியில் சேர்ந்து, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் நிலைக்கு உயர்ந்து, 2008ல், பணி ஓய்வு பெற்றேன்.
தலைமை ஆசிரியர் மாசிலாமணியின் அடிச்சுவடை பின்பற்றி, என்னால் முடிந்த அளவு மாணவர்களுக்கு உதவி வந்தேன். என் இரு மகள்களையும், ஆசிரியர் பணியில் சேர்த்துள்ளேன்.
தற்போது என் வயது, 75. பெயருக்கு ஏற்றார் போல், மாசில்லா இதயம் கொண்ட, தலைமை ஆசிரியர் மாசிலாமணியை நினைவு கூர்ந்து, பெருமைப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
- ஏ.செபாஸ்டியன், திருச்சி. தொடர்புக்கு: 94426 63976

