PUBLISHED ON : ஆக 01, 2026

பிள்ளைகள் வருகைக்காக வீட்டு வாசலில் நின்றிருந்தாள், விஜி.
திலீபனும், தீபிகாவும் பள்ளி வேனை விட்டு இறங்கி, 'அம்மா...' என, ஓடி வந்தனர்.
திலீபன், 5ம் வகுப்பும், தீபிகா, 4ம் வகுப்பும் படித்தனர்.
மகா சேட்டைக்காரன், திலீபன்.
வந்த வேகத்தில், ''அண்ணன் என்ன செய்தான் தெரியுமா...'' என, ஆரம்பித்தாள், தீபிகா.
''ஏய்... நீ ஒன்றும் சொல்லாதே... நான் சொல்றேன்...'' என்றபடி, சாப்பாட்டு பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தான், திலீபன்.
''அம்மா, இங்க பாருங்க... எங்க மிஸ் இன்று, மண்ணில் இதை நட்டாங்க. இடைவேளையின் போது, அவங்களுக்கு தெரியாம, இதை எடுத்துட்டு வந்துட்டேன்...'' என கூறி, அழகான செடியை காண்பித்தான்.
விஜிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
''திலீபா... நீ பள்ளிக்கு போகும் வழியில், வெயிலை தாங்க முடியவில்லை என்றால், என்ன செய்வாய்...'' என கேட்டாள், விஜி.
''பக்கத்துல மரம் இருந்தா, அதனடியில் கொஞ்ச நேரம் நிற்பேன்மா...'' என்றான், திலீபன்.
''நீ எடுத்து வந்த செடி தான், பின்னாளில் மரமாகி, நிழல் தரும் புரியுதா... அதுமட்டுமல்ல, மழையை தருகின்றன, மரங்கள். காற்று மாசுபாட்டை குறைத்து, பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. குளிர்ச்சியையும் தருகின்றன. நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்துகின்றன...'' என்ற அம்மாவின் பேச்சை கேட்டு வியந்தான், திலீபன்.
''சாரிம்மா. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா... இந்த செடியை எடுத்து போய், பள்ளியில் நட்டு வச்சுடறேன்...'' என்றான், திலீபன்.
பட்டூஸ்... மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்!
- எஸ். கவுரி மீனாட்சி
