
சந்திரபுரி நாட்டு அரசனுக்கு, அதிகாலையில் எழுந்ததும் சூரிய உதயத்தை பார்ப்பது வழக்கம்.
அன்றும் சூரிய உதயத்தை தரிசிக்க ஜன்னலை திறந்தான். அப்போது, மரத்தடியில் துாங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரன், கண் விழித்து அரசனை பார்த்தான்.
காலையில் கண்விழித்ததும், பிச்சைக்காரனை பார்த்ததால், அரசன் ஏமாற்றமடைந்தான். வெறுப்புடன் திரும்பினான். திரும்பிய வேகத்தில், தூணில் கால் கட்டை விரல் மோதி, ரத்தம் கசிந்தது. வலியை விட, அரசனுக்கு கோபம் பொங்கியது.
அந்த பிச்சைக்காரனை இழுத்து வர கட்டளையிட்டான்.
அரசவை கூடியது. தன் காயத்துக்கு காரணமாக இருந்த பிச்சைக்காரனை, தூக்கிலிட உத்தரவிட்டான், அரசன்.
பிச்சைக்காரன், கட கடவென சிரித்தான். சபையில் இருந்தோர் திகைத்தனர். அரசனுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் போனது.
'பைத்தியக்காரனே... எதற்கு சிரிக்கிறாய்...' ஆத்திரத்துடன் அரசன் கேட்டான்.
'அரசே... என் முகத்தில் விழித்ததால், உங்கள் கால் விரலில் சிறுகாயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் விழித்ததால், என் தலையே போகப் போகிறது. அதை நினைத்தேன்; சிரித்தேன்...' என்றான், பிச்சைக்காரன்.
அரசன் தவறை உணர்ந்து, தலை கவிழ்ந்தான். பிச்சைக்காரனை விடுவித்தான்.
கண்விழித்ததும் தன்னை முதல் முதலில் பார்த்த பிச்சைக்காரனுக்கு, வயிறார விருந்தளித்து, பொன்னும், பொருளும் தந்து வழியனுப்பி வைத்தான்.
குட்டீஸ்... தைரியம் இருந்தால் விதியையும் மாற்றலாம்.
க.வி.தனுஜா

