PUBLISHED ON : ஜன 01, 2026

நனவான 500 ஆண்டு கனவு
உ.பி.,யில் அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் 2024 ஜன.22ல் 'குழந்தை ராமர் சிலை' பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு தரிசனத்துக்கு திறப்பு. தொடர்ந்து மேல்தளம், வளாகத்தில் கட்டுமானப்பணி நடந்தது. 2025 நவ. 25ல் நிறைவு பெற்றது.
உயரமான பாலம்
செப். 28: உலகின் உயரமான சாலை பாலம் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் திறப்பு. இது ஆற்றின் மேற்பரப்பில் இருந்து 2051 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நீளம் 2.8 கி.மீ.,
முப்பெரும் விழா
ஜூலை 27: கங்கைகொண்ட சோழபுரத்தில் (அரியலுார் மாவட்டம்) முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள், பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கியது, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு என முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.
ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
உயரமான ரயில் பாலம்
ஜூன் 6: காஷ்மீரில் ஜம்மு - பாரமுல்லா ரயில் பாதை திட்டத்தின் கீழ், செனாப் நதியின் மேல் (1178 அடி) கட்டப்பட்ட உலகின் உயரமான ரயில் பாலம் (நீளம் 1.3 கி.மீ.,) திறப்பு.
கத்ரா -ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியது.
33 வினாடி... நொறுங்கிய விமானம்
ஜூன் 12: ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா 787 டிரீம்லைனர்' விமானம், 33 வினாடிகளில் மருத்துவக்கல்லுாரி விடுதி கட்டடத்தில் விழுந்து தீப்பற்றியது. ஒருவர் தவிர 241 பயணிகள் (குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி உட்பட) பலி. மருத்துவ மாணவர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 270 பேர் பலி.
திருச்செந்துாரின் கடலோரத்தில்...
ஜூலை 7: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
பயங்கரவாதத்துக்கு பதிலடி...
ஏப். 22: காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பாக்., லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல். 26 பேர் பலி.
ஏப். 23: இரு நாடுகள் இடையேயான சிந்து நதிநீர் பங்கீடு(1960) ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் ஏப். 27க்குள் வெளியேற, மத்திய அரசு உத்தரவு.
மே 4: செனாப் நதியின் மீதான பாக்லிஹர் அணையில் இருந்து பாக்., செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மே 7: 'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது. 100 பாக்., பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் ஆறு விமான தளங்களையும் இந்தியா தாக்கியது.
மே 10: பாகிஸ்தான் கோரிக்கையை தொடர்ந்து 'போர் நிறுத்தம்' அமல்.

