PUBLISHED ON : மார் 08, 2026

மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்
ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினம் எழுச்சியுடன் கொண்டாடப் படுகிறது. இது, அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார துறைகளில் பெண்கள் சாதித்த வெற்றிகளை கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட முக்கிய நாள்.
பெண்களின் உழைப்பு மற்றும் உரிமைக்காக போராடிய தொழிற்சங்க இயக்கத்திலிருந்துதான் வேரூன்றியது, சர்வதேச மகளிர் தினம்.
கடந்த, 1908ல், அமெரிக்காவில், நியூயார்க் நகரில், 15 ஆயிரம் உழைக்கும் பெண்கள், குறைந்த வேலை நேரம், நல்ல ஊதியம், வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி பேரணி சென்றனர்.
இந்தப் போராட்டத்தின் விளைவாக, 1910ல், டென்மார்க் நாட்டின் தலைநகர், கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச உழைக்கும் பெண்களின் மாநாட்டில், மார்ச் 8-ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை, 1975 முதல் இதை அதிகாரப்பூர்வமாக கொண்டாட அறிவுறுத்தியது.
சர்வதேச மகளிர் தினம், சமத்துவம் என்ற மையக் கருத்தை வலியுறுத்துகிறது. ஆண்களுக்கு சமமாக, பெண்களுக்கும் வாய்ப்புகளும், நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோள்.
பொருளாதார வலிமை: பெண்கள் வேலைவாய்ப்பில் சமமாகப் பங்கேற்கும்போது, உலகப் பொருளாதாரம் வலிமை பெறும். பல்வேறு ஆய்வுகளின்படி, பாலின இடைவெளியை குறைப்பதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக உயரும்.
ஆரோக்கியமான சமூகம்: முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் இருக்கும்போது, சமுதாயத்தில் உள்ள ஆரோக்கியம், கல்வி, சமூக பாதுகாப்பு போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.
ஊக்கம்: கல்வி, அறிவியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் பெண்கள் நிகழ்த்தும் சாதனைகள், இளம் பெண் குழந்தைகளுக்கு பெரிய கனவுகளை காணத் துாண்டுகோலாக அமையும்.
சர்வதேச மகளிர் தினம் என்பது, ஒவ்வொரு தனிநபரும் சமத்துவத்தை நோக்கி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நினைவூட்டுகிறது.
* வீட்டுக்குள்ளேயும், வேலை செய்யும் இடத்திலும் உள்ள பாலினப் பாகுபாடுகளைக் களைதல்
* பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் லட்சியங்களுக்கு ஆதரவளித்தல்
* பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான சூழலை உருவாக்குதல்
* பெண்கள், தலைமைப் பொறுப்புகளை ஏற்க ஊக்குவித்தல்.
பாலின சமத்துவம் என்பது, ஆண்களுக்கு எதிரான கருத்து அல்ல; அது, அனைவருக்கும் நியாயம் கிடைக்கும் உலகத்தை கட்டமைப்பதாகும்.
சர்வதேச மகளிர் தினம், பெண்களின் கடந்த கால போராட்டங்களையும், நிகழ்கால சவால்களையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
நாமும், 'சமத்துவமான, உலகத்தை உருவாக்குவோம்! ' என்ற உறுதிமொழியை ஏற்போம்.
சமத்துவம் மலரும் போதே, ஒரு தேசம் அதன் முழு ஆற்றலையும் அடையும்.
அமிர்தவர்ஷினி

