
ஜவ்வரிசி வடாம்!
ஒரு கப் ஜவ்வரிசியை எடுத்து, அதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைத்து எடுக்கவும். ஜவ்வரிசி, சீக்கிரம் கெட்டியாகி விடும் என்பதால், கரண்டியால் எடுத்து விடும் பதத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் கொதிக்கும் நீர் விட்டுக் கலந்து கொள்ளலாம். இந்த ஜவ்வரிசிக் கஞ்சியைப் பல பாகங்களாகப் பிரித்து, பல சுவைகளில் வடாம் போடலாம்.
உதாரணமாக,
* பச்சை மிளகாய் விழுது, பெருங்காயம், சீரகம் சேர்த்து செய்யலாம்
* தக்காளிப்பழ விழுது, பெருங்காயம் கலந்து செய்யலாம்
* சுத்தம் செய்த வேப்பம்பூ, பெருங்காயம், கருப்பு எள் சேர்த்தும் செய்யலாம்
* புதினா அரைத்த விழுதுடன் சேர்த்து செய்யலாம். பீட்ரூட் அல்லது கேரட்டை அரைத்துக் கூழ் காய்ச்சும் போது சேர்க்கவும். இந்த வடாம், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
கஞ்சி வடாம்!
சாதம் நிறைய மீந்து விட்டால், இரவு அதில் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வைக்கவும். மறுநாள் அதை நன்றாகப் பிழிந்து அதனுடன் பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து, மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். அதை சிறு. உருண்டைகளாகக் கிள்ளி வெயிலில் காயவைக்கவும். கெட்டியாக இருந்தால் அச்சில் போட்டுப் பிழியலாம். வெந்த ஜவ்வரிசியைக் கலந்தும் செய்யலாம்.
அவல் முறுக்கு வடாம்!
தேவையானவை:
கெட்டி அவல் - மூன்று கப்
எலுமிச்சம்பழம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயப் பொடி - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று.
செய்முறை: அவலை களைந்து, நீரில் ஊறவைக்கவும். 20 நிமிடங்களுக்கு பின், நீரை வடித்து, அதனுடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிறகு அதில் சீரகம், பெருங்காயப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசைந்து. முறுக்கு அச்சில் நிரப்பி, 'பாலிதீன் பேப்பரில் பிழிந்து, வெயிலில் காய வைக்கவும். இந்த வடாம் மிகவும் சுவையாக இருக்கும்.

