PUBLISHED ON : ஏப் 05, 2026

ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம்
ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் 7ம் தேதி, உலக சுகாதார நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது, உலக சுகாதார அமைப்பின் நிறுவன நாளை குறிக்கிறது.
இந்நாள், உலகளாவிய சுகாதார பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
உலக சுகாதார நாளின் மையக் கருத்து எதுவென்றால், சுகாதாரம் என்பது ஒரு மனித உரிமை என்பது தான். ஒருவர் வசிக்கும் இடம் எதுவாயினும், அவர் யாராக இருப்பினும், அவரது பொருளாதாரம் எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி, துாய நீர், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரமான சூழல் கிடைக்க வேண்டும்.
நோய்கள் தீவிரமடைவதற்கு முன், ஆரம்ப நிலையிலேயே தடுப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவதற்கு வலுவான ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுவது அவசியம். இவற்றை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் மருத்துவ வசதிகள் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
சுகாதாரம் என்பது உடல் ரீதியான ஆரோக்கியம் மட்டுமல்ல, மனம் மற்றும் சமூக நல்வாழ்வின் முழுமையான நிலையைக் குறிக்கிறது.
உடல் ஆரோக்கியம்: சரியான உணவு, சீரான உடற்பயிற்சி மற்றும் போதுமான துாக்கம் ஆகியவற்றின் மூலம் தொற்று நோய்கள் மற்றும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து உடலைப் பாதுகாத்தல்.
மன ஆரோக்கியம்: மன அழுத்தம் இல்லாதிருந்தால், மகிழ்ச்சியாக வாழலாம், சமூகத்துடன் நல்ல உறவைப் பேணுதல் ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
உடல் ஆரோக்கியத்தைப் போலவே, மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
உலக சுகாதார நாள் என்பது அரசாங்கங்களுக்கான அழைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விடுக்கப்படும் நினைவூட்டல்.
தடுப்பு நடவடிக்கைகள்: தடுப்பூசிகள் போடுவது, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது போன்ற அடிப்படை சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுதல்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை: மது, புகையிலை, போதைப் பொருட்களை தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவது.
சமூகப் பொறுப்பு: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதன் மூலமும், சமூகத்தில் உள்ளவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கப் பங்களித்தல்.
விழிப்புணர்வு: அரசின் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்த விழிப்புணர்வை சுற்றுப்புறங்களில் பரப்புவது.
உலக சுகாதார நாள், வருங்காலத்தில் சுகாதாரத் துறை எதிர்கொள்ளவுள்ள சவால்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம், தொற்று நோய்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு போன்ற சவால்களை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் சமமான ஆரோக்கியம் கிடைப்பதை உறுதி செய்வோம். நம் உடல்நலம் நம் பொறுப்பு; அதை மதித்து, முழு ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
திருநிறைச்செல்வன்
