
ரா.ரமணன், திண்டுக்கல்: பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களில், குடிநீர் பாட்டில்களில், 'மைக்ரோ பிளாஸ்டிக்' துகள்கள் உள்ளதாமே...
ஆமாம். புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை அவை. அதனால் தான், பிளாஸ்டிக் பயன்பாடே இருக்கக் கூடாது என்பதை, மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன!
பி.மரகதவள்ளி, செங்கல்பட்டு: ஆந்திர மாநிலத்தில், 'எதிர்க்கட்சியாக இருக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தவிர, அக்கட்சியின் மற்ற எம். எல்.ஏ.,கள், சட்டசபைக்கே வருவதில்லை. எனவே, அவர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது...' என்கிறாரே, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி செய்யும் அம்மாநில சட்டசபையின் சபாநாயகர்...
எல்லா மாநில சபாநாயகர்களுக்கும் இந்த துணிச்சல் வர வேண்டும். அதே நேரம், 'ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்...' என, ஆந்திர சட்டசபை சபாநாயகர் கூறி இருந்தால், அவருக்கு, 'சபாஷ்' போடலாம்!
கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: மஹாராஷ்டிராவில், பிறந்த, 10 நாட்களே ஆன குழந்தையுடன் வந்து ஒரு பெண், பிளஸ்டூ தேர்வு எழுதி உள்ளாரே...
எதிர்காலத்தில் மிகச் சிறந்த கல்வியாளராக, அவர் முன்னுக்கு வர வாழ்த்துவோம். இவர்களைப் போன்றவர்கள் கல்வியாளராக வந்தால், மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகும் என்பது உண்மை!
மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி: 'பதவி இருந்தால் தான், நான் செயல்பட முடியும்...' என்கிறாரே, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர், சரத்குமார்...
நடு இரவில், கனவு கண்டு, அதை தன் மனைவி, ராதிகாவிடம் சொல்லி, அவர், 'இப்படி கேளுங்கள்...' எனச் சொல்லிக் கொடுத்தாரோ, என்னவோ! முன்பு இப்படி கனவு கண்டு, பா.ஜ.,வில் சேர்ந்த கதை, உங்களுக்கு தெரியும் தானே, இப்ராஹிம்!
* ஆ.மகேஸ்வரி, மதுரை: சரளமாக ஆங்கிலம் பேச வரவில்லை என்பது, முன்னேற்றத்துக்கு தடையாகுமா?
இல்லவே இல்லை; தமிழிலேயே சாதிக்கலாம்! ஆனால், ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் தவறில்லை, மகேஸ்வரி! முயற்சி செய்தால், முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை!
மு.நாகூர், ராமநாதபுரம்: 'மனதின் வலிகளை இசை குணப்படுத்தும்...' என, இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளாரே...
உண்மை தான்! மனம் சஞ்சலப்படும் போதோ, சோர்ந்து போகும்போதோ, உங்களுக்கு பிடித்தமான இசையைக் கேட்டு பாருங்கள். மனம் லேசாகும்; புத்துணர்வு எண்ணங்களும் வரும், நாகூர்!
* ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: நடிகர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன், 'அண்ணா வளர்ச்சிக் கழகம்' என்ற கட்சியை துவங்கி, 'விஜய்யின் டி.வி.கே.,வுக்கு, 'டப்' கொடுப்பேன் என்கிறாரே...
சில ஆண்டுகள் அமைதியாக இருந்த சீனிவாசன், மீண்டும் காமெடி செய்ய ஆரம்பித்துள்ளார்... சிரித்து மகிழ்வோம்!

