PUBLISHED ON : ஜூன் 28, 2026

டி.ஜே.ரகுராமன், சென்னை: 'அம்மா உணவகம்' சிறக்க, காமெடி நடிகர் யோகிபாபு, 1 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளாரே...
பெரிய மனதுடைய நல்ல மனிதர், நடிகர் யோகிபாபு. தன்னைச் சுற்றியுள்ள சினிமா உலகத்தினர் பலருக்கும் உதவுகிறார் என கேள்விப்படுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த, இப்போதைய காமெடி நடிகர் இவர். இவரைப் போல் மற்ற நடிகர்களும், அம்மா உணவகத்துக்கு நிதி உதவி அளித்தால், பல ஏழைகள் பசியாறி, அவர்களை வாழ்த்துவர்!
எல்.மூர்த்தி, கோவை: சட்டசபை கூட்டத் தொடரில் பேசுவதற்காக, எதிர்க்கட்சி தலைவரான, தி.மு.க.,வை சேர்ந்த உதயநிதி, தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி எடுக்கிறாராமே...
கடந்த, தன் கட்சி ஆட்சியின் போது, சட்டசபை நிகழ்வுகளை நேரில் கற்றுக்கொள்ள, நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அலட்சியப்படுத்தியவர், இப்போது, அரசியலுக்கே புதிதான, த.வெ.க., எம்.எல்.ஏ.களுக்கு சரிசமமாக, பயிற்சி எடுக்கிறார் பாருங்கள்! ஆரோக்கியமான, பண்பட்ட சிந்தனை இருந்தால், சட்டசபையில் சாதிக்கலாம்... பார்ப்போம்!
* மூ.தெய்வானை, கோவை: டில்லியில் நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், முதல்வர் விஜய் மீது, பிரதமர் மோடி, தனி அக்கறை காட்டியுள்ளாரே...
புதிய முதல்வர், இளைஞர், தமிழகத்தில் மாற்று அரசியலுக்கு வழி வகுத்துள்ளார்: 'மத்திய அரசோடு இணக்கமாக இருப்போம்...' என்றும் கூறியுள்ளார். அதனால், விஜயிடம் அக்கறை காட்டியுள்ளார், பிரதமர் மோடி!
* வ.தியாகராஜன், கல்பாக்கம்: அ.தி.மு.க.,வின் இ.பி.எஸ்., தலைமைக்கு எதிர்காலம் எப்படி அமையும்?
அ.தி.மு.க.,வினர் விழித்துக் கொள்ளவில்லை எனில், அக்கட்சியின் சொத்துக்கள் அனைத்தும், பழனிசாமி கைக்கு சென்று விடும்; அதன்பின், கட்சி, அதோ கதி தான்!
டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை: தன் தொலைந்து போன சிரிப்பை மீட்டுக் கொடுத்தவர், ஸ்டாலின் என்கிறாரே, அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,விற்கு தாவிய, ஓ.பி.எஸ்.,?
ஓ.பி.எஸ்.,சா... எங்கே இருக்கிறார் அவர்? கண்ணுக்கெட்டிய துாரம் வரை, அவரைக் காணவில்லையே!
மு.நாகூர், ராமநாதபுரம்: 'த.வெ.க., தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில், தேனைத் தடவிக் கொடுத்துள்ளது...' என, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளாரே...
தி.மு.க., ஆட்சியில் என்ன வேம்பும், எட்டிக்காயுமா தடவிக் கொடுத்தனர். இல்லையே! சர்க்கரைத் தண்ணீரை தடவினர்... அது நீர்த்து, பல்லிளித்து விட்டது பாவம்! தங்கம் தென்னரசு, சேரக் கூடாத இடம் சேர்ந்து, அவதிப்படுகிறார்! 'அரசியலே வேண்டாம்' என ஒதுங்கி, 'ஸ்பிக்' நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவரை, விதி அரசியலுக்கு இழுத்து விட்டது!
ஆர்.சிவா, நெல்லை: காங்கிரஸ் நேருவின் சாதனையை, பா.ஜ.,வின் மோடி முறியடித்து விட்டாரே...
நீண்ட நாட்களாக பிரதமர் பதவி வகிப்பது, சாதாரண விஷயமல்ல. நேரு பிரதமராக இருந்தது, நம் நாடு சுதந்திரம் பெற்ற துவக்க காலமாக இருந்ததால், அவர் பெரிய பிரச்னைகளை சந்திக்கவில்லை; ஆனால், மோடிக்கு, ஒவ்வொரு நிமிடமும் பிரச்னை தான்; அம்புப் படுக்கை தான்! பிரச்னைகளை லாவகமாக கடக்கும் அவருக்கு, 'ராயல் சல்யூட்!'
