PUBLISHED ON : ஜூன் 28, 2026

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பு மற்றும் கல்லுாரி, 'அட்மிஷன்' என, அனைவரும், 'பிசி!' எனவே, இந்த வாரம் குட்டிக் குட்டித் தகவல்கள் மட்டும்! மொ பைல் போனில், எஸ்.எம்.எஸ்., என்ற குறுஞ்செய்தியை அனுப்புவதில் முதலிடத்தில் ஆசிய கண்ட மக்களும், அடுத்து, வட அமெரிக்க மக்களும் உள்ளனர். மூன்றாவதாக, மேற்கு ஐரோப்பிய நாடுகளும், நான்காவதாக, ஆப்ரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
****
ஸ்காட்லாந்து நாடு மட்டுமே, 'ஸ்காட்ச் விஸ்கி'யை அதிகளவு ஏற்றுமதி செய்து, அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டுகிறது.
****
பிரிட்டனில் ஆண்டுதோறும் சரியாக, 10 நபர்கள் இடியால் தாக்கப்பட்டு இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை கூடவும் இல்லை; குறையவும் இல்லை
****
பெண்களை கவர்வது எது? 'சிக்ஸ்பேக்' மூலம் உடற்கட்டை மேம்படுத்தினால், பெண்களை எளிதில் கவரலாம் என, பல ஆண்கள் நம்புகின்றனர்.
ஆனால், இது தவறானது என்று இப்போது தெரியவந்துள்ளது. பெண்களை மிகவும் வசீகரிப்பது ஆண்களின் உடல் நலமே என்று, ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள். உடல் நலம் உள்ள ஆண்கள் மூலம் தான் ஆரோக்கியமான குழந்தைகள் பெற முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்
*****
பண்டைய கிரேக்கத்தில், பொது இடங்களில் உடற்பயிற்சி செய்யும், ஆண்கள் நிர்வாணமாகத்தான் உடற்பயிற்சி செய்தனர். பண்டைய ஒலிம்பிக்கில், ஆண்கள் மட்டும், நிர்வாணமாகப் போட்டியில் கலந்து கொண்டு, விளையாடியதாக ஒலிம்பிக் வரலாறு தெரிவிக்கிறது. முதல் ஒலிம்பிக் போட்டியை காண, பெண் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
*****
இந்தியாவில், 4,609 நகரங்களும், 5 லட்சத்து ஐந்தாயிரம் கிராமங்களும் உள்ளன. இவற்றுள் மக்கள் வசிக்காத கிராமங்கள் மட்டும், 48 ஆயிரம் உள்ளன. இந்த கிராமங்கள் ஆடு, மாடு மேய்க்க உதவுகின்றன
****
மண்பானை நீர் குளுமையாக இருப்பது ஏன் தெரியுமா? மண்பானை களிமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மண்ணை, எவ்வளவு நெருக்கமாக இறுக்கினாலும் மிகமிக நுண்ணிய துளைகள் இருக்கவே செய்யும். துளைகள் வழியாக மண்பானை நீர் வெளியில் கசியும். வெளியில் கசியும் நீர், மண்பானைக்குள் உள்ள நீரின் வெப்பத்தை உறிஞ்சி ஆவியாகும். இதுதொடர்ந்து நடப்பதால் மண்பானை நீர் குளுமையாகிறது
*****
காபியில் கலக்கப்படும், சிக்கரி ஒரு தாவர வகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காபி ஸ்டிராங்காக இருப்பதற்காக இந்த சிக்கரி துாளைச் சேர்க்கின்றனர். செடி வகையைச் சேர்ந்த சிக்கரி, முதன்முதலில், ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான, ஹாலாந்து நாட்டிலிருந்து தான் மற்ற நாடுகளுக்கு அறிமுகமானது
*****
வவ்வால் பறக்கும் போது மனிதர்களுக்கு கேட்காத, தனக்கு மட்டுமே கேட்கக்கூடிய ஒலியை எழுப்பிக்கொண்டே பறக்கிறது. அந்த ஒலி, அது பறக்கும் போது எதிர்படும் பொருளில் மோதி, எதிரொலிக்கிறது. அந்த எதிரொலியும், வ வ்வாலுக்கு மட்டுமே கேட்கும். அதனால் தான், இருட்டில் கூட, எந்தப் பொருள் மீதும் மோதிக்கொள்ளாமல் அது பறக்கிறது.
ராடார் கண்டுபிடிப்பதற்கு வவ்வால் தான் முன்னோடி. வவ்வாலின் தனித்தன்மையைப் போலவே, வெகு தொலைவில் வரும் எதிரி நாட்டு விமானத்தின் ஒலியை கிரகித்துக் கொள்ளும் திறமை, ரா டார் கருவிகளுக்கு உண்டு
*****
இலக்கியம், பத்திரிகை மற்றும் நாடகம் போன்ற துறைகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் விருதுக்கு பெயர், புலிட்சர். அமெரிக்காவை சேர்ந்த, ஜோசப் புலிட்சர் இந்த விருதினை ஏற்படுத்தினார்.
அமெரிக்க ராணுவத்தில் இவர் சில காலம் பணிபுரிந்தார். பின்பு, ஜெர்மனி நாட்டு பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றினார். அதன்பின், 'நியூயார்க் வேர்ல்ட்' என்ற பத்திரிகையில் சேர்ந்த அவருக்கு, அரசியல் செல்வாக்கு பெற காரணமாக அமைந்தது.
புலிட்சர் தன், 40வது வயதுக்குள் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரை தட்டிச் சென்றார். தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, 'புலிட்சர்' விருதை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்
*****
பார்சல்களுக்கு, 'சீல்' வைத்து, முத்திரை பதிக்க, அரக்கைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த அரக்கு வேதியியல் பொருள் அல்ல. பெண் அரக்குப் பூச்சியின் உடலில் சுரக்கும் ஒரு பிசின் போன்ற திரவமே அரக்காகிறது. 50 ஆயிரம் பூச்சிகளிலிருந்து, ஒரு கிலோ அரக்கு எடுக்கப்படுகிறது.
இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிஸா, அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மிக அதிக அளவில் அரக்குப் பூச்சிகள் காணப்படுகின்றன.
*****
ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் தேதி, நம் நாட்டில், தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேற்குவங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு, இரண்டாவது முதலமைச்சராக பதவி ஏற்றவர், பிடன் சந்திரராய் - பி.சி.ராய். ஜூலை 1, 1882ல் பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக திகழ்ந்தவர்.
பி.சி.ராயின் மருத்துவ சேவையைப் போற்றும் வகையில், இந்திய மருத்துவ கழகம் அவருடைய பிறந்தநாளும், இறந்த நாளும் ஜூலை 1ம் தேதி என்பதால், அந்நாளை, தேசிய மருத்துவர் தினமாக அறிவித்தது.
*****
கொசுறு செய்தி:
'துாக்கத்தில், லீலா... லீலா என்று பு லம்பினீர்களே, யார் அந்த, லீலா?' என்று கணவனிடம் கேட்டாள், மனைவி.
'ஓ அதுவா? என் நண்பன் ஒரு நாய் வாங்கியிருக்கிறான். அதன் பெயர், லீலா. அதைத்தான் சொல்லி இருப்பேன்...' என்றான், கணவன்.
'ஆமாம், அந்த நாய் தான் இப்போது போன் பண்ணியது. இன்று மாலை நீங்கள் பீச்சுக்கு வர வேண்டுமாம்!' என்றாள், மனைவி.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
