/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: படிக்காதமேதை காமராஜர்!
/
கவிதைச்சோலை: படிக்காதமேதை காமராஜர்!
PUBLISHED ON : செப் 28, 2025

அக்., 2 - காமராஜர் நினைவு நாள்
கல்வி கொடுத்தவன் கண் கொடுத்தவன்
கல்வி கண் திறந்த ஆசான்!
அறியாமை இருளை நீக்கி
கல்வி என்ற வெளிச்சத்தால்
தமிழ்நாட்டை
ஒளிர வைத்தவர்!
அரசியலில் துாய்மை
நேர்மை பணிவு
பண்பு கொண்ட
எளிமையின் சிகரம்!
மாசற்ற மாணிக்கம்
படித்தவர்களை
உருவாக்கிய
படிக்காத மேதை!
ஆயிரம் கோவில்
கட்டுவதை விட
ஒரு கல்விக்கூடம்
கட்டுங்கள் என்றவர்!
திருமணம் என்பதை மறந்து
தாய்ப்பாசம் என்ற ஒற்றை
சொல்லில் அடங்கியவர்!
துடிப்பான அரசியல்வாதி
பசியால் பள்ளிக்கு வராத
மாணவ சமுதாயத்திற்கு
மதிய உணவு
திட்டம் அளித்தவர்!
இந்திய அரசியலில்
ஆதிக்கம் செலுத்தியவர்
பிரதமர் பதவியை
ஒதுக்கியவர்!
கர்ம வீரர் காமராஜர்
சுயக்கட்டுப்பாடு
ஒழுக்கம் தவறாமல்
வாழ்ந்தவர்!
மனிதருள் புனிதர் நடமாடிய தெய்வம்
ஏழைகளின் காவலர்
எட்டும் கனியாக
இருந்தவர்!
- ஆர்.சீதாராமன், சீர்காழி.
தொடர்புக்கு: 98423-71679