
சுரதா பதிப்பக வெளியீடு, கவிஞர் சுரதா எழுதிய, 'சொன்னார்கள்!' என்ற நுாலிலிருந்து:
முன்னாள் முதல்வர், அண்ணாதுரை: ந ம் கையில், ஐந்து விரல்கள் இருக்கின்றன. ஐந்து விரல்களும் தனித்தனியாக தான் இயங்குகின்றன. ஆனால், பொதுவான ஒரு வேலை என்று வரும்போது, ஐந்து விரல்களும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இத்தகைய உறவு தான் இருக்க வேண்டும்.
சிவாஜி கணேசன்:
ஒருவருக்கு, 24 வயதில் தான் நல்ல வாழ்க்கை துவங்குகிறது. என்னுடைய வாழ்க்கையிலும், அந்த வயதில் தான் நல்ல நேரம் வந்தது.
சிலம்புச் செல்வர், ம.பொ.சிவஞானம்:
ஒ ருமுறை நான் சென்னை பச்சையப்பன் கல்லுாரி ஆண்டு விழாவில் உரையாற்றினேன். அதை, ஒரு நாளிதழில், 'ம.பொ.சி., இறுதி உரையாற்றினார்!' என்று வெளியானது. அது நடந்து, 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், நான் உரையாற்றிக் கொண்டு தான் இருந்தேன்.
அரசியல்வாதி, திருமதி சவுந்தரா கைலாசம்:
தெரு ஓரத்தில் மசால் வடை போட்டு விற்பர்... வடை வாசனை அடிக்கிற போதெல்லாம் அதை வாங்கி சாப்பிட வேண்டுமென்ற ஆசை வரும். யாராவது சென்று வாங்கி வந்து கொடுத்தால் சாப்பிடுவோம். நாலு பேர் பார்ப்பரே என்பதால், நாங்கள் நேரடியாக அங்கு போக மாட்டோம். இப்படித்தான் இன்னமும் சில பொய்யான பாவனையில், வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முத்துராமன்:
சிறு வயதிலேயே எனக்கு நடிப்பின் மீது ஒரு வெறி. அந்த வெறியில் தான், நான் எவரிடமும் சொல்லாமல், வீட்டை விட்டு ஓடி வந்து, நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்தேன். பின், சினிமாவில் நடித்தேன். என்னை எங்கெல்லாமோ தேடிப்பார்த்து அலுத்துப் போய், கடைசியில் என்னை தேடுவதையே நிறுத்தி விட்டனர், என் பெற்றோர். பிறகு, சில படங்களில், நான் நடித்திருப்பதை பார்த்து தெரிந்து கொண்டனர்.
நடிகர், வி.நாகையா:
சித்துாரிலிருந்து, 6 கி.மீ., தொலைவிலிருந்த ஒரு கிராமத்தில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்த கிராமத்தில் சென்று இறங்கியவுடனேயே ஒரு கள்ளுக்கடையின் முன், உருக்கமான தேசிய பாடல்களை பாடினேன். நான் பாடிக் கொண்டிருந்தபோதே கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறி துப்பி விட்டான்; அப்படியும் விடவில்லை நான். அவன் காலில் விழுந்து குடிப்பதை விடும்படி வேண்டினேன். அன்று மறியல் செய்து விட்டு, நான் சித்துார் திரும்பியபோது, என் மனைவி சித்துார் அரசு மருத்துவமனையில் இறந்து கிடந்தாள்.
ரஷ்ய முன்னாள் அதிபர், குருசேவ்:
பழைய காலத்தில் பைத்தியக்காரர்களை, 'ஐஸ்' தண்ணீரில் குளிக்க செய்வது வழக்கம். அதேபோல செய்தால் தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின், பைத்தியக்காரத்தனம் நீங்கும்.
********
ராமையா பதிப்பகம் வெளியீடு, எழுத்தாளர் 'பட்டத்தி மைந்தன்' எழுதிய, 'கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்!' என்ற நுாலிலிருந்து:
என். எஸ்.கிருஷ்ணனை, நாகரிக கோமாளி என, அழைப்பர். இந்த பெயர் அவருக்கு எப்போது வந்தது தெரியுமா?
கடந்த, 1949ல், நல்லதம்பி என்ற படத்தை தயாரித்தார், என்.எஸ்.கே., அந்த படத்தில், நாகரிக கோமாளி வேடத்தில், நகைச்சுவை கலந்த பாடல்களைப் பாடி நடித்தார்.
'நாட்டு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானய்யா; ஆட்டம் ஆடி, பாட்டு பாடி, நல்ல அழகான ஜதையோடு வந்தானய்யா...' என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது; 'நாகரிக கோமாளி' என்ற பட்டப்பெயரும் நிலைத்தது.
- நடுத்தெரு நாராயணன்

