
'ஜீவாவும், நானும்' நுாலில், கம்யூ., கட்சியை சேர்ந்த தா.பாண்டியன்:
க ம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பதவி வகித்த, ப.ஜீவானந்தமிடம், 'ஒலிபெருக்கி வந்துவிட்ட பிறகும் நீங்கள் எல்லா பக்கங்களிலும் திரும்பித் திரும்பி சுழன்று பேசுவதால் பாதிப் பேச்சு சரியாக கேட்பதே இல்லை...' என்றார், தோழர் ஒருவர்.
'ஒலி பெருக்கி இருக்கிறபோது இவ்வளவு பெரிய சத்தம் எதற்கு?' என்று கேட்டார், இன்னொரு தோழர்.
சிரித்துக்கொண்டே தன் அனுபவங்களை விளக்கினார், ஜீவா...
'நான் பேச்சாளனாக வர வேண்டும் என்று நினைத்ததே இல்லை. அந்தக் காலத்தில் அடிபடத் துணிந்தவனும், சிறைக்கு செல்ல அஞ்சாதவனும் தான் மேடை ஏற துணிவான். அப்போது, மேடைப் பேச்சு என்பது அலங்கார நடை; பொழுதுபோக்கு சமாசாரம் அல்ல. வெள்ளையரை, அந்நிய ஆட்சியை எதிர்க்கும் அக்கினி, நெஞ்சுக்குள் பற்றி எரிய வேண்டும்.
'அது வாய் வழியாக ஆவேசப் பொறிகளை கொட்ட வேண்டும். அது தான் முக்கியம். அப்போதெல்லாம் ஒலிபெருக்கி ஏது? இதுபோன்ற மேடையும் கிடையாது. கையில் மண்ணெண்ணெய் லாந்தர். இன்னொரு கையில் நாற்காலி. கிடைத்த மைதானத்தில் கூட்டம். வந்தே மாதரம் என்று திடலில் சிலர் கூடி கத்துவோம். கூட்டம் கூடி விடும். அவர்களிடம் பேசுவோம்.
'இதைத்தவிர, சுவரொட்டி மற்றும் சுழல் விளக்கு ஏதும் இல்லை. சில சமயம் பேச்சைக் கேட்க, 20 பேர் இருப்பர். எங்களை அடிக்கவும், பிடித்துப் போகவும், 30 போலீஸ்காரர்கள் இருப்பர்.
'அந்தக் காலத்தில் வாகனங்களும் கிடையாது; கால்நடையாக தான் செல்ல வேண்டும். கூட்டம் பெரிதாக கூடிவிட்டால், சத்தம் போட்டு பேச வேண்டி வரும். சுற்றிலும் மக்கள் இருப்பதால், எல்லாப் பக்கங்களிலும் திரும்பி திரும்பி பேச வேண்டியிருந்தது. அதுவே, பழக்கமாகி விட்டது.
'மேடைப் பேச்சு என்பது, அண்மைக்காலத்தில் உருவான உத்தி. பலரைத் திரட்டி மைக்கில் ஒருவர் மட்டும் பேசுகிற இந்த முறை, சுதந்திர போராட்ட காலத்தில் உருவானது தான்.
'காந்திஜி பேசுவார். கூட்டத்திற்குள் பலர் வரிசையாக நிற்பர். ஆயிரம் பேருக்கு ஒருவராக நின்று, காந்திஜி சொன்னதை அப்படியே சத்தம் போட்டு சொல்வர். அவர்கள் தான் ஒலிபெருக்கிகள். மொழி பெயர்ப்பும் இப்படி தான். இப்படிப்பட்ட கூட்டங்களில், மூச்சுக்கூட விடாமல் அமைதி காப்பது வழக்கம்...' என்றார், ஜீவா.
*************
எழுத்தாளரும், திரைப்படக் கதை, வசனகர்த்தாவும், நடிகருமான மறைந்த ஜாவர் சீதாராமன், ஒரு பேட்டியில் கூறியது:
ப ல படங்களுக்கு நான் வசனம் எழுதினாலும், அந்த நாள் படத்துக்கு எழுதிய வசனம் சம்பந்தமாக ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கிறது. 'காசியிலும், காஞ்சியிலும் அறிவுதான் வளர்த்து வந்தோம். சிந்தித்து சிந்தித்து தான் இந்த சீர்கெட்ட நிலைக்கு நாம் வந்துள்ளோம்...' இப்படி, பண்டரிபாய் பேசும் வசனம் எழுதியிருந்தேன்.
ஆனால், 'இந்த வசனம், அண்ணாதுரையை தாக்குவதாக இருக்கிறது, சேர்க்க வேண்டாமே...' என்று எதிர்ப்பு எழுப்பினார், சிவாஜி கணேசன். காஞ்சிபுரம் தான், அண்ணாதுரை பிறந்த ஊர். பல ஆட்சேபனை, சமாதானங்களுக்கு பிறகு, 'இருக்கட்டும்' என்று முடிவாயிற்று. ஆனால், 'அது சங்கராச்சாரியாரை பாதிப்பதாக இருக்கிறது...' என்று காரணம் காட்டி, அந்த வசனத்தை வெட்டி விட்டது, தணிக்கை குழு. காரணம், காஞ்சிபுரத்தில் தான் சங்கராச்சாரியாரும் வசித்து வந்தார்.
நடுத்தெரு நாராயணன்

