PUBLISHED ON : ஜன 25, 2026

ஜனவரி 25 - தேசிய வாக்காளர் தினம்
ஜ னவரி 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக இந்தியாவில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள், 'வாக்களிக்கும் உரிமை'யின் புனிதத்தைப் போற்றும் முக்கிய நிகழ்வாகும். ஜனவரி 25ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம், 1950ல், இந்த நாளில் இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டதை குறிக்கும் வகையில் தான். எனினும், 2011ம் ஆண்டு முதல்தான் இந்த தினத்தை அனுசரித்து வருகிறோம்.
இந்த தினத்தைக் கொண்டாடுவதன் முதன்மை நோக்கம், குறிப்பாக புதிய மற்றும் இளைய வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
* புதிய வாக்காளர்களைச் சேர்த்தல்: 18 வயதை அடைந்த அனைத்து இளைஞர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள உதவுதல்.
* பங்கேற்பை உறுதி செய்தல்: வாக்காளர்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல், தடையின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துதல்.
* அதிகாரமளித்தல்: ஒவ்வொரு குடிமகனும் தன் ஓட்டின் பலத்தை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட ஊக்குவித்தல்.
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை என்பது வெறும் சலுகை அல்ல; அது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஓர் அடிப்படை அரசியல் உரிமை.
ஓட்டு என்பது குடிமக்களின் அதிகாரம். அது, அரசாங்கத்தை அமைப்பதிலும், சட்டங்களை உருவாக்குவதிலும், நாட்டை ஆளும் கொள்கைகளை தீர்மானிப்பதிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வாக்களிக்கும் செயல், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு நம்முடைய ஆதரவையோ, எதிர்ப்பையோ பதிவு செய்யும் மிக எளிமையான, சக்தி வாய்ந்த வழி.
தேசிய வாக்காளர் தினத்தின்போது, தேர்தல் ஆணையத்தின் பங்கு பாராட்டப்படுகிறது. இது சுதந்திரமான, நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் தன்னாட்சி அமைப்பு.
தேர்தல் ஆணையத்தின் பணிகள்:
* வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல்
* தேர்தல் தேதி மற்றும் அட்டவணையை அறிவித்தல்
* அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் சின்னங்களை ஒதுக்குதல்
* தேர்தல் விதிமுறைகளை செயல்படுத்தி, நியாயமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்தல்
* 'வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள்...' என்ற இயக்கத்தின் மூலம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
வாக்காளர் பட்டியலில் முதல் முறையாகப் பதிவு செய்யும் இளைஞர்கள், இந்த தினத்தின்போது மிகவும் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். 18 வயது என்பது வெறும் வயதல்ல; நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கும் தகுதி.
இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டவர்கள், சமூக ஊடக புழக்கம் மிக்கவர்கள். எனவே, அவர்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல், மாற்றத்தின் துாதுவர்களாக செயல்பட வேண்டும்.
உணர்ச்சிவசப்பட்டோ, வதந்திகளை நம்பியோ அல்லாமல், வேட்பாளர்களின் கல்வி, பிற தகுதிகள், பின்னணி மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
தேசிய வாக்காளர் தினம், இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் உரிமையையும், கடமையையும் நினைவுபடுத்தும் கண்ணாடி. நம் ஒவ்வொரு ஓட்டும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நமது வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் சமூக நீதியைக் கட்டமைக்கும் அடித்தளம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நம்முடைய ஓட்டை வீணடிக்காமல், பொறுப்புடனும், நம்பிக்கையுடனும் வாக்களிப்போம். வலுவான, ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்குவோம்.
ஆறாம் தம்புரான்

