அயல்நாட்டு பழவகைகள் உற்பத்தி ஏக்கருக்கு ரூ.20,000 மானியம்
அயல்நாட்டு பழவகைகள் உற்பத்தி ஏக்கருக்கு ரூ.20,000 மானியம்
ADDED : ஜன 29, 2025 12:44 AM
சென்னை:அயல்நாட்டு பழ வகைகள் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு நிதியில், மானியம் வழங்கும் பணியை, தமிழக தோட்டக்கலை துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், புளூபெர்ரி, கிவி, வெண்ணெய்பழம், லிச்சி, ரம்புட்டான் உள்ளிட்ட அயல்நாட்டு பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதற்கேற்ற வெப்பநிலை மற்றும் மண்வளம், இம்மாவட்டங்களில் உள்ளது. இப்பழங்களில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
இப்பழங்கள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து, கன்டெய்னர்களிலும் பதப்படுத்தப்பட்ட பழங்கள் எடுத்து வரப்படுகின்றன.
குளிர்ந்த நிலையிலேயே வைத்திருந்து, அவற்றை சாப்பிட வேண்டியுள்ளது. அதிக குளிர்ச்சியால், இப்பழங்களில் உள்ள சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை.
எனவே, தமிழகத்தில் சாதகமான மாவட்டங்களில், இப்பழங்களின் சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக, தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ், மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பழ வகைக்கும் தகுந்தபடி 2.47 ஏக்கருக்கு 14,400 ரூபாய் முதல், 20,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான பயனாளிகள் தேர்வில், தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளனர்.