
புதிய களம்... பழக்கப்பட்ட கதை
'மோட்டோ கிராஸ் ரேஸிங்' களத்தில் பயிற்சியாளரான தந்தை, பந்தய வீரனான மகன் மற்றும் அவனது மனைவி, குழந்தையை சுற்றிச் சுழலும் கதை. மனைவிக்காக பந்தய களத்தை துறக்கும் காரணத்தால் மகன் விகாஸ், தந்தை சுனில் உறவில் விரிசல். ஒரு சூழலில், தந்தையின் களங்கம் துடைக்க மீண்டும் ஆக்ஸிலேட்டரை முறுக்க வருகிறான் மகன்.
தனி டிராக்கில் 'ப்ளாஷ் பேக்' சொல்லாது, இடையிடையே கடந்தகால சம்பவங்களை சொல்லி 'நடந்தது என்ன' என்பதை உணர்த்துவது; சுனில், விகாஸ், அனன்யா உள்ளிட்ட பிரதான பாத்திரங்கள் கதையின் போக்கில் படிப்படியாக குணமாற்றம் அடைவதை காட்டுவது; தந்தை - மகன் குறித்து பாசமழை பொழியாமல் யதார்த்தமாக உறவை சொல்வது என, இயக்குனர் கடைப்பிடித்த இந்த வித்தியாசத்தில், 'பழகிய கதை' இனிக்கிறது!
எது குறித்தும் உச்சபட்ச உணர்ச்சி நிலையில், கதறும் பின்னணி இசையோடு பேசும் 'தெலுங்கு சினிமா' பாணியை இதில் தவிர்த்திருப்பது ஆறுதல். மேடு பள்ளங்கள் நிறைந்த மண் சாலையில் பைக்குகள் சீறும் 'மோட்டோ கிராஸ் ரேஸிங்' சார்ந்த காட்சிகளை, ஒளிப்பதிவாளர் யுவராஜ் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
மின்னலென விரையும் ரேஸ் வண்டிகளின் ஆற்றல் சொல்லும் ஒலிக்கலவை, அவ்வேகத்திற்குரிய படத்தொகுப்பு, களத்தின் வளைவுகளில் வெற்றிக்காக வீரர்கள் கையாளும் நுணுக்கங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டி ருக்கிறது.
'இதுபோன்ற கதைகளில் இறுதி பந்தயத்தில் நாயகன் வென்று விடுவான்' என்பது ஊரறிந்தது; நாயகனின் வெற்றி மூலம்
வெளிப்படும் உணர்ச்சியும், அதற்கான காரணங்களும் க்ளைமாக்ஸை ஜெயிக்க வைக்கும்; இதில், காரணம் வலுவாக இருப்பதால் நம் உணர்ச்சியின் நரம்புகள் சரியான அளவில் மீட்டப்படுகின்றன.
ஆக...
தவழும் தமிழக தேர்தல் களத்தை ஒப்பிடுகையில் இறக்கை கட்டி பறக்கிறது இப்பந்தய களம்.

