தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ 'கோட்டை'யை தகர்க்குமா தி.மு.க.,? 'சுமை'யை குறைக்குமா அ.தி.மு.க.,?

'கோட்டை'யை தகர்க்குமா தி.மு.க.,? 'சுமை'யை குறைக்குமா அ.தி.மு.க.,?

'கோட்டை'யை தகர்க்குமா தி.மு.க.,? 'சுமை'யை குறைக்குமா அ.தி.மு.க.,?


ADDED : பிப் 25, 2025 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2025 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''சித்ராக்கா... மாநகராட்சில சொத்து வரி உயர்வுக்கு எதிரா கட்சிக்காரங்க, வணிகர்கள் எல்லாம் போராட்டம் நடத்துனாங்களே. எந்த 'எபெக்ட்'டும் இல்லையே''

''கொளுத்துற வெயில்ல வந்திருக்கிற... பீ கூல்''

செல்லமாக குழைந்தாள் சித்ரா.

''மித்து... 2017 முதல் குப்பை வரி விதிச்சதை ரத்து செஞ்சிருக்காங்க...

''குப்பை வரி செலுத்தியிருந்தாங்கன்னா, புது வரி செலுத்தும்போது தொகையை ஈடுசெஞ்சுக்கலாம்.

''இருந்தாலும் சொத்து வரி ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வுங்கறது சுமைதான்... அ.தி.மு.க., காரங்க மீண்டும் போராட்டம் நடத்தற முடிவுல இருக்காங்களாம். வணிகர்களும் கைகோர்த்தா வரிச்சுமையக் குறைச்சுற முடியும்னு நினைக்கறாங்க...''

''அப்படியாக்கா... நடக்கட்டும்... நடக்கட்டும். மாநகராட்சி காந்தி சிலை முன்னாடி ஆர்ப்பாட்டம், கட்சி நிகழ்ச்சிகள்ன்னு நடத்திட்டு இருந்தாங்கள்ல...

''குறுகலான ரோடா இருக்கறதால போக்குவரத்து பாதிக்குதுன்னு சொல்லி, இப்ப மங்கலம் ரோட்ல போலீஸ் அவுட்போஸ்ட் பக்கமாக இதுக்குன்னு இடம் ஒதுக்கியிருக்காங்களாம்.

''மாநகராட்சி அலுவலகம் பக்கவாட்டுல நடந்துட்டிருந்த போராட்டம்லாம், இனி எதிர்ல நடக்கப்போகுது.

''ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட, அனுமதி கேட்டப்பதான், அ.தி.மு.க.,காரங்க கிட்ட இந்த விஷயத்தை போலீஸ் சொல்லியிருக்காங்க...

''எல்லா கட்சிக்காரங்களுக்கும், அமைப்பினருக்கும் இதேமாதிரிதான்னா எங்களுக்கும் 'ஓகே'தான்னு சொல்லீட்டாங்களாம்''

''எனக்கும் ஓகே''

கலகலத்தாள் சித்ரா.

பாயாத நடவடிக்கை


''மித்து... திருப்பூர் தெற்கு மின் அலுவலக எல்லையில, மெயின் ரோட்டை ஆக்கிரமிச்சு, தனியார் நிறுவனத்துக்காக, 'டிரான்ஸ்பார்மர்' அமைச்சது சர்ச்சையாச்சுல்ல... புகாரைத் தொடர்ந்து இப்ப டிரான்ஸ்பார்மரை மாத்தீட்டாங்க... 1.14 லட்சம் ரூபா அபராதமும் விதிச்சிருக்காங்க...

''ஆனா இதுக்கு உடந்தையா இருந்த மின் வாரிய அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையுமே இல்லையாம்''

''இதுக்கெல்லாம் 'ஷாக்' ஆகாதீங்கக்கா... ஊரக உள்ளாட்சிகள்ல பதவிக்காலம் முடிஞ்சதால, நிறைய ஊராட்சிகள்ல அடிப்படை பணிகள்கூட நடக்குறதில்லையாம். குப்பை அள்றது, தண்ணீர் வினியோகம், கொசு ஒழிப்பு வேலையெல்லாம் சரியா நடக்கிறது இல்லை. ஆளும் கட்சிக்காரங்க, துாய்மைப்பணியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டாதான் வேலை நடக்குதாம்...

''மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால குப்பை அள்ள பேட்டரி வாகனம்; மின்சாரத்தை சேமிக்க சோலார் பேனல்ன்னு சொல்லி 'பில்'லு போட்டு அள்ளுவதற்கு அலுவலர்கள் திட்டமிடறாங்களாம். ஏற்கனவே உள்ளதும் பழுதாகிக்கிடக்குறப்ப இது வேஸ்ட்ங்கறாங்க''

''மித்து... அவங்களுக்கு 'வேஸ்ட்' இல்லைல்ல''

புரிந்தது போல் தலையாட்டினாள் மித்ரா.

'கடமை'க்குக் கூடாது


''மித்து... மாசத்தோட கடைசி வார சனிக்கிழமை, பாலிதின் ஒழிப்பு இயக்கமா அறிவிச்சிருக்காங்க.

''மாவட்ட நிர்வாகத்தோட வழிகாட்டுதல்ல, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ அமைப்புகள் இணைஞ்சு இந்தப்பணியில ஈடுபடறாங்க...

''குறைஞ்சது ஒரு வாரத்துக்கு முன்னாடி மக்களுக்குத் தெரியப்படுத்தணும். ஆனா, பி.ஆர்.ஓ., ஆபீஸ்ல இருந்து, முந்தின நாள் சாயங்காலமாதான் இதுகுறித்தே 'பிரஸ் நோட்' அனுப்பறாங்களாம்... அப்புறம் எப்படி இந்தப்பணிக்கு தன்னார்வலர்கள் தயாராக முடியும்...''

நியாயமாக கேள்வி எழுப்பினாள் சித்ரா.

மதிக்காத போலீஸ்


''மித்து... லிங்கேஸ்வரர் ஊர் ஸ்டேஷன்ல குற்றங்கள், பாலியல் அத்துமீறல் புகார்கள் வந்தா எப்.ஐ.ஆர்., போடவே யோசிக்கிறாங்களாம். புகார்தாரர்களை மதிக்கிறதே இல்லையாம்.

''சமீபத்துல 13 வயசு சிறுமி பலாத்கார வழக்குல ரெண்டு நாள் தாமதம் பண்ணிட்டாங்க.... உளவுப்பிரிவு போலீசும் தகவலை உயரதிகாரிகளுக்கு கொண்டுபோகாம மறைச்சுடறாங்க... சமூக நலத்துறைக்குப் புகார் போன பின்னாடிதான் நடவடிக்கை எடுக்கணும்னா இவங்க எதுக்கு...

''எஸ்.பி., சாட்டைய சுழட்டுனாருன்னாதான், புகாரை இனி அலட்சியமா 'டீல்' பண்ண மாட்டாங்க''

''சித்ராக்கா... 'சிற்பம்' ஊர் ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ்காரர் வாகனத்தணிக்கையின்போது சர்ச்சைக்குள்ள மாட்டிக்குவாரு... சமீபத்தில அதிகாரி நடவடிக்கைக்கு உள்ளாகி மீண்டு வந்தாரு.

''ரோந்து, ஸ்டேஷன் பணி என, பல பணிகளுக்கு மாத்தினாலும், பிரச்னையைத் துாண்டுறதுல 'ராஜா'வா இருக்காரு... ஸ்டேஷன் அதிகாரில துவங்கி அனைவருக்கும் தலைவலியா இருக்காராம்.

''உயரதிகாரிங்கதான் இதுக்குத் தீர்வுகாண முடியும்ங்கறாங்க போலீஸ் தரப்புல''

''மித்து... சிட்டி போலீஸ்ல டி.சி.,யா இருந்தவரு, மாவட்ட அதிகாரியாயிட்டாரு. டிராபிக் அதிகாரி ஒருத்தரு ரிடையர்டு ஆயிட்டாரு... மற்றொரு டிராபிக் அதிகாரி மருத்துவ விடுப்பில இருக்காரு... அதிகாரிங்கள நியமிக்காததால பணிப்பளுவும், வேலைல சுணக்கமும் இருக்குது''

மாமூல் அறுவடை


சித்ராக்கா... பல்லடத்துல டாஸ்மாக் கடையே இல்லாத கிராமம்னு கணபதிபாளையத்தைச் சொல்வாங்க... ஆனா, கடை மட்டும்தான் இல்ல... மத்தப்படி சரக்கு, குட்கான்னு வியாபாரம் பட்டையக் கிளப்புதாம். மாமூல் போறதால போலீஸ் கண்டுக்கிறதில்லையாம்''

''மித்து... புளியம்பட்டி பஞ்சாயத்து ஆபீஸ் பக்கத்துல, அரசு இடத்தை சில பேர் ஆக்கிரமிச்சிருக்காங்க. தாசில்தார்ட்ட புகார் பண்ணியிருக்காங்க... அந்த இடத்துக்கு மின் இணைப்பு கொடுத்துட்டாங்களாம். சாமானிய மக்கள் கனெக்ஷன் வாங்கறப்ப 'ரூல்ஸ்' பேசுறாங்க... இவங்களுக்கு எப்படி மின் வாரியத்தினர் கனெக்ஷன் கொடுத்தாங்கன்னு கேக்குறாங்க மக்கள்... சரியான கேள்விதான....''

''சித்ராக்கா... உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் கலப்படத் தடுப்பு பிரிவுல தாலுகா அளவுல அலுவலர்கள் இருக்காங்க... தங்களோட கட்டுப்பாட்டுல இருக்கிற பகுதிகள்ல வர்த்தகர்கள் விண்ணப்பிக்கிற பணிக்கு, திருப்பூர், அவிநாசி ரோட்டுல இருக்கிற ஒரு ஜெராக்ஸ் கடையைத் தான் பரிந்துரைக்கிறாராம். கடைய நடத்துறவரு, இந்த துறைல தற்காலிக ஊழியரா இருந்தவராம்.

''உணவுப்பொருள் பரிசோதனை, தரச்சான்றுன்னு நாங்களே பண்ணித்தர்றோம்னு வர்த்தகர்களை கடைக்காரரு வளைக்கிறாங்களாம். அலுவலர்களுக்கான 'கவனிப்பு'ன்னு சொல்லி கணிசமான தொகையை வசூல் பண்ணீடறாங்களாம்.

''சகல நுணுக்கங்களும் தெரிஞ்சவர்ங்கறதுனாலே, சில சமயம் தானே 'மாவட்ட அலுவலர்' தோரணைல துாள் கெளப்புறாராம். 'விநாயகர்'தான் பார்த்துக்கணும்''

அம்பலப்படுத்தினாள் மித்ரா.

வளைக்கப்படும் இடம்


''மித்து... அவிநாசி பக்கத்துல புது 'லே அவுட்' நிறைய உருவாகுது... பழைய லே அவுட்கள்ல ரிசர்வ் சைட்களை ஆளும்கட்சிக்காரங்க வளைக்கிறாங்களாம்.

''ரிசர்வ் சைட்க்கு அருகே இருக்கிற மனை உரிமையாளர்களை அணுகி, தங்கள் இடத்தோட அருகில் இருக்கிற ரிசர்வ் சைட்டையும் பயன்படுத்திக்குங்க... ஆவணத்தை ரெடி பண்ணித்தர்றோம். வருவாய்த்துறைல எங்களுக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு சொல்லி பணத்தைக் கறக்கிறாங்களாம். இது எங்க போய் முடியுதோ தெரியல''

''மித்து... மாவட்டம் முழுவதும் பகுதிவாரியா நில அளவைப் பிரிவுல சர்வேயர்களை டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க... வடக்கு பகுதியில் பணியாற்றும் அலுவலர் மட்டும் ரெண்டு வருஷத்துக்கு மேலாகியும் இடத்தைக் கெட்டியா பிடிச்சிருக்காரம். அதிகாரிகள் 'ஆசி'தான் காரணமாம். 'இளங்கோ'வடிகள் மாதிரி யாரும் இப்ப இருக்கறதில்லையே''

ஆதங்கப்பட்டாள் சித்ரா.

கோட்டையை தகர்ப்பாரா?


''சித்ராக்கா... திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரா மேயர் தினேஷ்குமாரை நியமிச்சிருக்காங்க...

''வேலம்பாளையத்தில் பெரிய அளவு கட்சி அலுவலகம் திறந்துட்டாராம். கட்சியினர் அமரும் அறை, அலுவலர் அறை, மாவட்ட செயலாளர் அறைன்னு தனித்தனியா அறை அமைக்கிறாங்க.

''ஒன்றியம் மற்றும் அவிநாசி யிலும் அலுவலகம் அமைக்க உள்ளாராம்.

''அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி ரெண்டு தொகுதியுமே அ.தி.மு.க., கோட்டை. இதை எப்படி உடைக்கப்போறாருன்னு தான் தெரியல''

''நீ எதோ கோட்டை கட்டுறமாதிரி யோசிக்கிறயே மித்து''

''கோட்டை விட்டுத்தாங்க்கா எனக்கு பழக்கம்''

இருவரின் சிரிப்புச்சத்தமும் அடங்க நீண்ட நேரமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us