பரபரப்பான வேலை... நடுவில் கொஞ்சம் உணவு... என்ன பிரச்னை?
பரபரப்பான வேலை... நடுவில் கொஞ்சம் உணவு... என்ன பிரச்னை?
PUBLISHED ON : செப் 20, 2026

உ ணவு என்பது, தட்டில் என்ன இருக்கிறது முக்கியமல்ல, எங்கே, எப்படி, எவ்வளவு வேகமாக சாப்பிடுகிறோம், சாப்பிடும் உணவைப் பற்றி எப்படி உணர்கிறோம், சாப்பிடும் போது பசி உணர்வு எந்த அளவு இருக்கிறது, உணவு நன்றாக செரிமானம் ஆகிறதா என்று பல்வேறு விஷயங்களைப் பொருத்தது.
வீடு, அலுவலகம், கல்லுாரி என, எல்லா இடங்களிலும் மொபைல்போனில் பேசுவது, விவாதங்கள் என்று ஏதோ ஒரு வேலையை செய்தபடி, உணவை சாப்பிடுவது நமக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், வேலைகளுக்கு நடுவில் உணவு சாப்பிடுவதை நம் உடம்பு விரும்புவதில்லை.
இரண்டாவது மூளை எனப்படும் குடல், தொடர்ந்து மூளையுடன் தொடர்பில் உள்ளது. உணவைப் பார்த்து, அதன் மணத்தை நுகர்ந்து, வாயில் உணவின் சுவையை உணர்ந்த நொடியில், மூளைக்கு சமிக்ஞைகள் சென்று செரிமான மண்டலத்தை துாண்டி, உணவை சாப்பிட உடலை தயார் செய்கிறது.
கவனம் முழுவதும் வேறு வேலையில் இருக்கும் போது, என்ன சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல், சரியாக மெல்லாமல், விழுங்கலாம். மூளையும், குடலும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், மன அழுத்தம், பதட்டம், கவனச்சிதறல் போன்ற உணர்வுகள் மூளையில் தோன்றும் இது செரிமானத்தை பாதிக்கலாம். ஆரோக்கியமான மனநிலை இல்லாவிட்டால், செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிற்றில் அசவுகரியம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
வேறு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டே சாப்பிடுவதில் உள்ள இன்னொரு சிக்கல், பசி உணர்வும் தெரியாது; வயிறு நிறைந்ததும் தெரியாது. போதுமான அளவு உணவு சாப் பிட்டோமா என்பதும் தெரியாது.
இரைப்பை, குடலில் இருந்து மூளைக்கு செல்லும் சமிக்ைஞகள், வயிறு நிறைந்த உணர்வைத் தரத் துாண்டும். ஆனால், வேலையில் மட்டுமே கவனம் இருந்தால், இதை நாம் உணர்வதற்கு, 20 நிமிடங்களுக்கு மேல் ஆகலாம்.
சில சமயங்களில், வயிறு நிறைந் து விட்டது என்ற உணர்வை மூளை உணர்வதற்கு முன்பாகவே, நாம் சாப்பிட்டு முடித்திருப்போம்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் செய்யப்பட்ட சர்வதேச ஆய்வில், கவனம் இல்லாமல் சாப்பிடுபவர்கள், அடுத்த வேளை உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாக தெரிய வந்துள்ளது. காரணம், பசியைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கவனச்சிதறல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேலைக்கு நடுவே அவசரமாக சாப்பிடும் போது, உணவுடன் சேர்த்து, காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம்.
வேலைக்கு நடுவே சாப்பிட்ட மதிய உணவு நினைவில் இல்லை என்றால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பசி எடுக்கும்; வழக்கத்தை விட அதிகமாக சிற்றுண்டிகளை சாப்பிடுவோம்.
* வேலைக்கு நடுவில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க...
* சாப்பிடுவதற்கென்று தனியாக ஒரு இடத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அங்கு வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது.
ஒவ்வொரு வேளையும் உணவை நிதானமாக, மென்று, ருசித்து சாப்பிட குறைந்தது 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும்போது, போனில் பேசுவது, சமூக ஊடகங்களை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வயிறு நிறைய சாப்பிடாமல், இன்னும் கொஞ்சம் சாப்பபிடலாம் என்ற உணர்வு வரும் போது, சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களுக்கு பின், நிதானமாக குறைந்தது, 100 அடி நடப்பது செரிமானத்திற்கு நல்லது.
டாக்டர் பியூஷ் பவானே, ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர், சென்னை. 80563 83717piyush.bawane45@gmail.com
