சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கு வரும் மவுன அச்சுறுத்தல்
சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கு வரும் மவுன அச்சுறுத்தல்
PUBLISHED ON : ஜூன் 14, 2026

'சிகரெட் பழக்கமே எனக்கு இல்லை. நான் ஏன் நுரையீரல் புற்றுநோய் பற்றி கவலைப்பட வேண்டும்?' என்பது தான், நம் நாட்டில் கோடிக்கணக்கானவர்களின் நம்பிக்கை. இது உண்மையில்லை என்பதை, சர்வதேச அளவில் எங்கள் மையத்தையும் இணைத்து நடத்தப்பட்ட 'தி கிரியேடிவ்' என்ற ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு லட்சத்து 85,000த்திற்கும் மேற்பட்ட மார்பு எக்ஸ்-ரேக்களை ஆய்வு செய்ததில், அவற்றின் முடிவுகள் வியப்பை அளிக்கின்றன. காரணம், சிகரெட் பழக்கம் இல்லாதவர்களில் 70 சதவீதம் பேருக்கு நுரையீரல் கட்டிகள் உருவாகின்றன. இவர்களில் 38 சதவீதம் பேர், 55 வயதிற்கும் குறைவானவர்கள்.
பல ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோய் சிகரெட் பழக்கத்துடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டு வந்தது. புகையிலை ஒரு முக்கிய ஆபத்து காரணியாக இருந்தாலும், இளம் வயதினர் உட்பட சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும், நுரையீரலில் கட்டி, தழும்பு ஏற்படுகிறது என்பது தான் யதார்த்த நிலையாக உள்ளது.
நுரையீரல் முடிச்சுகள்
காற்று நிரம்பிய நுரையீரல் திசுவை காட்டிலும் வெள்ளை நிறமாக இருக்கும் சிறிய கட்டி களை, நுரையீரல் முடிச்சுகள் என்று சொல்கிறோம். இவை பெரும்பாலும் ஆபத்தில்லாதவை.
ஆனால், சில ஆரம்ப நிலை முடிச்சுகள், நுரையீரல் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், ஆரம்ப நிலையில் உள்ள முடிச்சுகள் அரிதாகவே அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
இருமல், மார்பு வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல், தீவிரமான பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் தீவிரமடைந்த பின்னரே பலருக்கு நோய் இருப்பது தெரிய வரும். இதனால் தான், பல நேரங்களில் சிகிச்சை பலனில்லாமல் போகிறது.
யாருக்கு அதிக ஆபத்து?
வாகன புகை, தொழிற்சாலை மாசுபாடு, கட்டுமான துாசி, வீட்டிற்குள் சமைக்கும் போது ஏற்படும் புகை, சிகரெட் புகைப்பவர்கள் வெளியிடும் புகை, மோசமான காற்றுத் தரத்திற்கு நீண்டகாலம் ஆட்படுதல் ஆகியவை, நம் நாட்டில் நகரம், பெருநகரம், கிராமம் என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் உள்ளன.
இவை அனைத்தும், காலப்போக்கில் நுரையீரல் பாதிப்புக்கு வழி செய்கின்றன.
நகரமயமாக்கல் பல நன்மைகள் தந்தாலும், துாய்மையான காற்றுக்கு யாரும் முன்னுரிமை கொடுப்பதில்லை.
நுரையீரல் புற்று நோயை கண்டறிவதில் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று, பலர் தங்களை முற்றிலும் ஆரோக்கியமாக உணர்கின்றனர். அறிகுறிகள் இல்லை என்றால் நோய் இல்லை என்று நம்பி, மருத்துவ பரிசோதனை செய்ய முன்வருவதில்லை.
ஏ.ஐ.,
எல்லா துறைகளையும் போன்றே பரிசோதனை முறைகளிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு பெரும் பங்கு வகிக்கிறது.
வழக்கமாக செய்யப்படும் எக்ஸ்-ரேக்களில், கவனிக்கப் படாத, அசாதாரணமான மாற்றங்களை துல்லியமாக கண்டறிய செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
நுரையீரல் புற்று நோய் புகை பிடிப்பவர்களை மட்டுமே பாதிக்கிறது என்ற எண்ணம் வரக்கூடாது. 40 வயதுக்கு மேல் மாசு, துாசி நிறைந்த சூழலில் வேலை செய்பவர்கள், சிகரெட் பழக்கம் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள், நுரையீரல் நோய் பாதிப்பு உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள், தொடர்ச்சியான இருமல், காரணமின்றி உடல் எடை குறைதல், மீண்டும் மீண்டும் மார்பு நோய் தொற்றுகள், மூச்சுத் திணறல், சளியில் ரத்தம் வருவது போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், முழு நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
காரணம், சிகரெட் பழக்கம் இல்லாதவர்களில் 70 ச தவீதம் பேருக்கே, நுரையீரலில் கட்டி உருவாகிறது என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதே பாதுகாப்பானது.
டாக்டர் அருண்குமார் கோவிந்தராஜன்,செயல் இயக்குநர் மற்றும் கதிரியக்க நிபுணர், ஆர்த்தி ஸ்கேன்ஸ், சென்னை 75500 75500info@aarthiscans.com
