ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் நறுமண எண்ணெய் சிகிச்சை!
ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் நறுமண எண்ணெய் சிகிச்சை!
PUBLISHED ON : ஜூலை 05, 2026

துாக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு, 'ரிப்ளெக்சாலஜி' முறையில், நறுமண எண்ணெய் கொண்டு பாதங்களில், மசாஜ் செய்யும் போது, எந்த அளவுக்கு துாக்கம் வருகிறது என்பதற்கான ஆய்வை செய்தோம்.
ரிப்ளெக்சாலஜி என்பது, பாதங்கள், உள்ளங்கை, காதுகளில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும், இயற்கை மருத்துவ முறை. இந்திய பாரம்பரிய மருத்துவ முறையில், குறிப்பிட்ட புள்ளிகளை துாண்டும் போது, உள் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால்,
தேவையற்ற அழுத்தம் குறைந்து, நல்ல ஓய்வான நிலைக்கு உடல் செல்கிறது.
துாக்கமே இல்லாமல் சிரமப்படும் 40 பேர் எங்கள் ஆய்வில் கலந்து கொண்டனர். இவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள்.
இவர்களுக்கு, தொடர்ந்து 21 நாட்கள் நறுமண எண்ணெய் தடவி பாதங்களில் மசாஜ் செய்தோம். துாக்க பிரச்னை இல்லாத, தினமும் எட்டு மணி நேரம் ஆழ்ந்து துாங்கும் 20 பேரை அழைத்து, இவர்களுடன் அமர வைத்து, அவர்களின் சுவாசத்தை மட்டும் இயல்பாக கவனிக்க சொன்னோம்.
துாக்கம் வராமல் சிரமப்படுபவர்களுக்கு, நறுமண எண்ணெய் வைத்து, பாதங்களில் மசாஜ் செய்யும் போது, நல்ல ஆழ்ந்த துாக்கம் இருந்ததை எங்கள் ஆய்வில் உறுதி செய்தோம்.
நறுமண எண்ணெயில், பல மூலிகை செடிகளின் எண்ணெய் கலந்து உள்ளது. தாவரங்களில் இயற்கையாக இருக்கும் வேதிப்பொருட்களின் அடிப்படையில், ஒவ்வொரு மூலிகைக்கும் பலவித மருத்துவ குணங்கள் உண்டு. உதாரணமாக, லாவண்டர் எண்ணெய், நரம்பு மண்டலத்தை துாண்டி, நல்ல துாக்கத்தைக் கொடுக்கும்.
துாக்கமின்மை என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. இதில் வயது வேறுபாடு எதுவும் கிடையாது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் துாக்கமின்மையால் அவதிப்படுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
சரியான துாக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை நோய் என, பல பாதிப்புகள் வருகின்றன.
மருந்துகள் இல்லாமல் ஆழ்ந்த துாக்கத்தை வரவழைக்க, ரிப்ளக்சாலஜி முறை நல்ல தீர்வாக இருப்பதை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர்கள் சொன்னதை, தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபித்து உள்ளோம்.
எங்களின் ஆய்வு கட்டுரை, சர்வதேச மருத்துவ இதழான 'பப்மெட்' இதழில் வெளியாகி உள்ளது.
துாக்கம் மேம்படுவதால், பல நோய்களை தடுக்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து உள்ளோம்.
டாக்டர் தீபா யோகநாதன், இயற்கை மருத்துவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி, சென்னை 044 252 22682 sakshaayaan@gmail.com
