ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் அபாயத்தை அதிகரிக்கும் சிகரெட்!
ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் அபாயத்தை அதிகரிக்கும் சிகரெட்!
PUBLISHED ON : ஏப் 05, 2026

முடக்குவாதம் - 'ருமட்டாய்டு ஆர்த்ரை ட்டிஸ்' என்பது நாள்பட்ட தன்னுடல் தாக்க நோய். இதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, மூட்டுகளின் திசுக்களை, வெளிக் காரணி என தவறாக நினைத்து தாக்குகிறது. இது தொடர்ச்சியான வலி, வீக்கம், கை, கால் விறைப்புத்தன்மை, படிப்படியாக மூட்டு சேதத்தை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம் என்பது தொற்று நோய்; கிடையாது. பரவக் கூடியதும் இல்லை; உணவு, குளிர் காலநிலையால் ஏற்படாது.
ஆண்களை விட பெண் களிடையே, முடக்குவாதம் அதிகமாகக் காணப்படுகிறது,
மரபணுரீதியில் முடக்கு வாதம் வரலாம். சிகரெட் பழக்கம் இருப்பது, இந்நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
மூட்டுகளில் வலி, வீக்கம், வெப்பம் ஆகியவை, முடக்குவாதத்தின் அறிகுறிகளாகும், பாதிக்கப்பட்ட மூட்டுகளை நகர்த்துவதில் சிரமம் இருக்கும். காலையில் எழுந்ததும், மூட்டுகளில் விறைப்புத்தன்மை 30 - 60 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.
இந்நோய் பொதுவாக விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள், முழங்கால்கள், கணுக்கால், கால் விரல்களின் சிறிய மூட்டுகளை சமச்சீரான அளவில் பாதிக்கிறது. சோர்வு, பலவீனம், சகிப்புத்தன்மையின்மை போன்ற எதிர்மறை உணர்வுகளும் ஏற்படுகின்றன.
இத்தனை அசவுகரியங்கள் இருந்தாலும், முடக்குவாதத்தால் காய்ச்சல் ஏற்படுவது அரிதே.
ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மிதமாக இருப்பதால், மருத்துவ ஆலோசனை பெறாமல் அலட்சியமாக இருந்து விடுவர். முடக்கு வாதத்திற்கு முறையாக சிகிச்சை செய்யாவிட்டால், நோயின் தன்மை தீவிரமாகி, மூட்டுகளில் நிரந்தர செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதன் காரணமாக, நடப்பதற்கும், அன்றாட வேலைகளை செய்வதற்கும் கூட முடியாது.
பரிசோதனை
'ருமட்டாய்டு பேக்டர்' எனப்படும் ரத்தப் பரிசோதனை, ஆன்டி சிசிபி பரிசோதனை பாதிக்கப்பட்ட மூட்டுகளின் எக்ஸ்--ரே எடுத்துப் பார்த்து நோயை உறுதி செய்யலாம்.
சிகிச்சை
ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கு, ஒருங்கிணைந்த சிகிச்சை முறை தான் பலன் தரும். மருந்து, மாத்திரை, பிசியோதெரபி, நோய் பற்றிய புரிதல், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை ஆகியவை இதில் அடங்கும்.
ஆரம்ப கட்டத்தில், தரப்படும் மருந்துகள், மூட்டு சிதைவை குறைக்கும். இந்த மருந்துகள், வலி நிவாரணியாக மட்டுமல்லாமல், நோய் தீவிரமாவதை தடுக்கவும் உதவும்.
அழற்சியை தடுக்கும் ஸ்டிராய்டு இல்லாத வலி நிவாரணிகள், ஸ்டிராய்டு மருந்துகள், நோயின் தன்மைக்கு ஏற்ப தரப்படும் ஆன்டி ருமட்டாய்டு மாத்திரைகள் மற்றும் உயிரியியல் மருந்துகள் ஆகியவை நடைமுறையில் உள்ள சிகிச்சைகள்.
மூட்டு வலி, வீக்கம், அறிகுறிகளை குறைக்க வலி நிவாரணிகள், அழற்சிக்கு எதிரான மருந்துகள் உதவும். இவற்றை குறைந்த நாட்களுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும். நீண்ட நாட்களுக்கு சாப்பிடுவது வயிற்றுப் புண்கள், சிறுநீரக பாதிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் சாப்பிடக் கூடாது.
ஸ்டிராய்டு மருந்துகள், உடனடி நிவாரணம் தருபவை.
ஸ்டிராய்டு மருந்துகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால், சர்க்கரை கோளாறு, உடல் பருமன், கண்புரை, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே சாப்பிட வேண்டும்.
நோய் எதிர்ப்பு செல்கள், மூட்டுகளை சிதைப்பதை, ஆன்டி ருமட்டாய்டு மருந்துகள் கட்டுப்படுத்தி, மூட்டுத் திசுக்கள் சிதைவதை தடுக்கின்றன.
இவற்றின் செயல்பாடு மெதுவாக இருக்கும். எனவே, தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதன் பலன், 4 - 8 வாரங் களுக்குப் பிறகே தெரியும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நிறுத்தினால், நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள், பக்க விளைவுகளை அறிய, குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தம், சிறுநீரகப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இந்த மருந்துகளை, கர்ப்பிணி, தாய்ப்பால் தரும் பெண்கள் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவது கூடாது.
தற்போது நடைமுறையில் உள்ள புதிய பயலாஜிக்ஸ் எனப்படும் உயிரியல் மருந்துகள், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் சிகிச்சையில் நல்ல பலனை அளிக்கின்றன.இவை நோயைக் கட்டுப்படுத்துவதோடு, அழற்சியையும் குறைக்கின்றன.
ருமட்டாய்டு பாதிப்பிற்கு, உணவுக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. ஆனால், தவறாமல் பிசியோதெரபி செய்வது அவசியம்.
இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது; கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மட்டுமே சாத்தியம்.
டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், முடக்குவாத நோய் மூத்த நிபுணர், சென்னை.1860 500 7788ramkisandy@gmail.com

