PUBLISHED ON : ஜூலை 05, 2026

''உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமின்றி, தினமும் குறைந்தது ஏழு மணி நேரம் ஆழ்ந்த துாக்கமும் அவசியம்'' என டாக்டர் சக்திவேல் வலியுறுத்தினார்.
திருப்பூர் ஆடிட்டர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆடிட்டர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் பேசியதாவது:
உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை சரியாக செலவிடாவிட்டால் அவை கொழுப்பாக மாறி உடல் பருமனை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாதது, ஹார்மோன் மாற்றங்கள், பரம்பரை தன்மை ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய காரணங்களாகும்.
மேலும், போதிய துாக்கமின்மையும் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். தினமும் ஏழு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் அவசியம். இரவு 9.30 முதல் 10:00 மணிக்குள் துாங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து குறைந்தது 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். துாக்கம் குறையும்போது மனஅழுத்தமும் பசியும் அதிகரித்து, உடல் எடை கூடும்.
35 வயதுக்கு மேல் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு ஏற்ற உணவுகளை அளவோடு சாப்பிட்டு, வாரத்தில் ஆறு நாட்கள் பணியிலும், ஒரு நாளை உடல்நலம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
