PUBLISHED ON : மே 17, 2026

''ஒத்த மனுஷியா இருந்து புள்ளைங்கள காப்பாத்துனா. இன்னிக்கு எல்லாரும் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டாங்க. பம்பரமா சுத்திக்கிட்டு இருந்தவ, வீட்டுப்படி தாண்டாம, கட்டில்லயே முடங்கிட்டா''
- இந்த வரிகளுக்குள் சிக்காமல் முதுமையை வெல்வது எப்படி என, அரசு மருத்துவமனை எலும்பு, முடநீக்கியல், விபத்து பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியனிடம் கேட்டோம்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
உடல் தளர்ந்ததும் பலரும் தாமாகவே இயக்கத்தை குறைத்து கொள்கின்றனர். ஆனால், முற்றிலும் முடங்கி விடக்கூடாது. சிறிய நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி செய்வது என இயங்கி கொண்டே இருந்தால் தான் உடல் சுறுசுறுப்பாகும். எலும்புகள் வலிமையாகும். உடலின் மற்ற உறுப்புகளும் சீராக இயங்கும்.
தனியாக வசிக்கும் முதியோர், வெஸ்டர்ன் டாய்லெட் இல்லாத பட்சத்திலும், அமர்ந்து மலம் கழிக்கும் வகையிலான ரெடிமேட் டாய்லெட் வாங்கி பொருத்துவது, சுவர்களில் ஆங்காங்கே கைப்பிடி, கிரில் கம்பிகள் பொருத்துவது, பாத்ரூ ம் தரையில் வழுக்காத டைல்ஸ் மாட்டுவது என, சில எளிய வசதிகளை செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் தேவையில்லாத, எலும்பு முறிவு விபத்துகளை குறைக்கலாம்.
இயங்காமல் முடங்கும் போது, நுரையீரலில் தொற்று ஏற்படலாம், படுக்கை புண் வருதல், சிறுநீர் தொற்று ஏற்படுதல், ஜீரண சக்தி குறைதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் அடுத்தடுத்து வரும்.
வயது அதிகரிக்கும் போது, நடக்கும் போது பிடிமானம் தேவைப்படும். நிறைய மாடல்களில் 'ஸ்டிக்' கிடைக்கின்றன. குச்சி பிடித்து நடப்பதை கேவலமாக கருதக்கூடாது. அறுவை சிகிச்சை செய்த பிறகு சிலர் நடக்க முடியாமல் அவதிப்படுவர். மடக்கிக் கொண்டு செல்லும் 'வாக்கர்' வாங்கினால் எங்கும் எடுத்துச் சென்று நடக்கலாம். இப்படி இயக்கத்தை சீராக வைக்க தேவையான சில விஷயங்களை செய்து கொள்வது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
