குழந்தையின் தலையில் அடி செய்ய வேண்டியதும் கூடாததும்
குழந்தையின் தலையில் அடி செய்ய வேண்டியதும் கூடாததும்
PUBLISHED ON : மே 03, 2026

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு குதுாகலம்தான். விளையாடும் போது, எங்காவது உயரத்தில் இருந்து தவறி விழ வாய்ப்புண்டு. இப்படி குழந்தைகள் விழுந்தவுடன், பதற்றத்தில் என்ன செய்வதென தெரியாமல், முதலுதவி சிகிச்சை அளிக்க ஆரம்பித்து விடுவர்.
விழுந்த இடத்தில் வீக்கம், வலி இருந்தால், உடனே அப்பகுதியை அழுத்தி தேய்ப்பது, எண்ணெய் போட்டு நீவிவிடுவது கூடாது. இது ஆபத்தில் முடியலாம் என, டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அரசு மருத்துவமனை எலும்பு, முடநீக்கியல் பிரிவு துறை இயக்குனர் வெற்றிவேல் செழியன் கூறியதாவது:
கீழே விழும் போது குழந்தைகள் முதலில் கையை ஊன்றுவது வழக்கம். அழுத்தம் காரணமாக கை மூட்டு பகுதியில் எலும்பு பாதிக்கப்படலாம். இதனால், கை, கால் திருப்ப முடியாமல் அவதிப்படலாம்.
இச்சமயங்களில் பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறே, எண்ணெய் கொண்டு நீவிவிடுவது தான். இதனால் அப்பகுதியில் உள்ள தசை, எலும்பாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம்.
கை மூட்டு நடுவே பந்தை வைத்து மூடினால், எப்படி இருக்குமோ அப்படியான நிலைக்கு எலும்பு மாறிவிடும். தவறாக எலும்பு இணையவும் வாய்ப்புள்ளது.
இப்படி நிகழும் பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்து தான், அடிப்பட்ட பகுதியை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். சிகிச்சைக்கு பின், 3-6 மாதங்கள் வரை, எலும்பு சரியாக இணைந்ததா என கண்காணிக்க வேண்டும். இதனால், அடிபட்டதும், அப்பகுதியை எதுவும் செய்யாமல், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
தலையில் அடிபட்டால், சுயநினைவு இழத்தல், தலைவலி, வாந்தி ஏற்படும். மூளையை சுற்றியுள்ள இடங்களில் அழுத்தம் ஏற்பட்டு, மூளை எலும்பு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அழுத்தி தேய்ப்பதால், ரத்தநாளங்கள் மேலும் சேதமடையலாம். சி.டி., ஸ்கேன் எடுத்தால், மூளை பாதிப்பை கண்டறிய முடியும்.
முன்மூளை பாதிக்கப்பட்டால் மூக்கு வழியாகவும், நடுமூளையெனில் காது வழியாகவும், பின் மூளை அடிபட்டால் வாய் வழியாகவும் ரத்தம் வரலாம்.
இச்சூழலில் காலம் தாழ்த்தாமல், உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். எலும்பு முறிவு சார்ந்த பிரச்னைகளை எக்ஸ்-ரே வில் கண்டறியலாம்.
தலை, சவ்வு சார்ந்த பாதிப்புகளுக்கு, சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., மூலம், பாதிப்பின் தன்மையை அறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
- ரா.வித்யா
