அதிக ரத்த சர்க்கரை, இரும்பு சத்து குறைபாடாகவும் இருக்கலாம்!
அதிக ரத்த சர்க்கரை, இரும்பு சத்து குறைபாடாகவும் இருக்கலாம்!
PUBLISHED ON : ஜூலை 19, 2026

மூன்று மாத ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்வதற்கான பரிசோதனை, 'ஹெச்.பி.ஏ1சி!.,'
நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள், நம்பிக்கையுடன் செய்து வரும் இப்பரிசோதனை, எல்லா நேரமும் சரியான முடிவை தருவதில்லை என, சர்வதேச மருத்துவ இதழான, 'லான்செட்'டில் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.
கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், 'அனீமியா' எனப்படும் ரத்த சோகை காரணமாக, சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் சராசரி ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாதை சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், 'ஹெச்.பி.ஏ1சி.,' பரிசோதனை, ரத்த சோகை மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு மாறுபட்ட அளவை காண்பிக்கிறது என தெரிவித்துள்ளார். குறிப்பாக, ரத்த சோகை உள்ளவர்களுக்கு இரும்பு சத்து குறைபாட்டால், ரத்த சிவப்பணுக்கள், ஆரோக்கியமாக உள்ளவர்களைக் காட்டிலும் அதிக நாட்கள் ரத்தத்தில் தங்கி விடுகின்றன. இதனால், அவை அதிக சர்க்கரை அளவை கிரகித்துக் கொள்கின்றன.
இதனால், ரத்த சர்க்கரை அளவை அதிகம் காண்பிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை பரிசோதனை செய்து கொள்பவர்கள், ரத்த சோகை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். நம் நாட்டில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களில், ஐந்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது என, சமீபத்திய முடிவுகள் தெரிவிக்கின்றன. சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால், ரத்த சோகை, அனைத்து வயதினரிடமும் பரவலாக உள்ளது.
அதிகப்படியான உடல் மற்றும் மன சோர்வு, மூச்சிரைத்தல், முடி கொட்டுதல், பசியின்மை உட்பட பல அறிகுறிகள் ரத்த சோகைக்கு உண்டு. தினசரி உணவில் சர்க்கரை, கொழுப்பு உள்ளவற்றை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், அன்றாடம் தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துகள் உணவில் இல்லாமல் போய் விடுகின்றன. ரத்த சோகை உள்ளவர்கள், கம்பு, ராகி, முழு தானியங்கள், பட்டாணி, தண்டுக்கீரை, உலர்ந்த திராட்சை, அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சி, ஈரல், மண்ணீரல் போன்றவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
இரும்புச் சத்து உணவுகளோடு, வைட்டமின் 'சி' உள்ள நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடும்போது, இரும்புச் சத்து முழுமையாக கிரகிக்க உதவும்.
காபி, டீ போன்ற பானங்கள், கால்சியம் மாத்திரைகளோடு சேர்த்து, இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடும் போது, டானிக் குடிப்பது கூடாது; இவை, இரும்புச் சத்து கிரகிப்பை தடுத்து விடும்.
ஹெச்.பி.ஏ1சி., பரிசோதனை முடிவுகள் அதிக ரத்த சர்க்கரை அளவை காண்பித்தால், ரத்த சோகை உள்ளதா என்பதை கண்டறிய ஹீமோகுளோபின் அளவையும் பரிசோதிப்பது அவசியம்.
பேராசிரியை உமா மகேஸ்வரி, மருத்துவம் சார் ஊட்டச்சத்தியல் -துறை, எஸ்.டி.என்.பி.வைஷ்ணவ் கல்லுாரி, சென்னை 94434 60886 umamaheswari.p@sdnbvc.edu.in
