PUBLISHED ON : நவ 16, 2025

தனிமை என்பது முதுமையில் தவிர்க்க முடியாத ஒன்று. துணையுடன் இருந்தாலும்
சரி, தனித்து இருந்தாலும் சரி; தோட்டம் பராமரிப்பு, புத்தக வாசிப்பு,
டி.வி., என எத்தனை தான் பொழுதை கழித்தாலும், ஒரு வித இறுக்கமான மனநிலை,
பலர் எதிர்கொள்ளும் சிக்கல்.
இவர்களுக்கு, செல்ல பிராணிகள் வளர்ப்பு சரியான தேர்வாக இருக்கும் என்கிறார், கால்நடை மருத்துவர் சக்கரவர்த்தி ராஜமோகன். அவர் நம்மிடம் கூறியதாவது:
செல்லபிராணிகள், முதியவர்களுக்கு உண்மையான துணையாக இருக்கும். நாய்கள்
மட்டுமின்றி பூனை, பறவைகள் என விருப்பமான பிராணியை தேர்வு செய்து
வளர்க்கலாம்.
நாய்களை பொறுத்தவரையில், லாப்ரடார், போமேரேனியன், ஸ்பிட்ஸ், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்றவை உகந்தவை.
இவை நேரத்தை இன்பமாக கழிக்க உதவுவதுடன், பாதுகாப்பாகவும் உள்ளது.
குறிப்பாக, தனிமை, அச்சத்தால் துாக்கமின்றி தவிப்பவர்களுக்கு, நாய்கள்
பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. உடல் நலம் இல்லாத முதியோர், பெரிய நாய்
இனங்களை தவிர்க்கலாம். முதுமையான பெண்களுக்கு பூனை இனங்களில், பெர்ஷியன்
விருப்பமானதாக உள்ளது. பெரும்பாலும் இவை வீட்டிற்குள்ளே பொழுதை கழிப்பவை.
தவிர, ஆப்ரிக்கன் கிரே கிளிகள், காக்கட்டூக்கள் போன்ற பறவைகள் நன்றாக பழகினால் உரிமையாளர்களுடன் அழகாக பொழுதை கழிக்கும்.
இருப்பினும், கிளிகள், புறாக்கள் போன்றவற்றால் சில நேரங்களில் நுரையீரல்
தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், டாக்டர்கள் ஆலோசனை பெறவேண்டியது
அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

