PUBLISHED ON : மே 31, 2026

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் -பி.சி.ஓ.எஸ்., என்பது இளம் பெண்களை பாதிக்கும் பொது வான பிரச்னை. கருக்குழாயில் ஏற்படும் நீர்க்கட்டி களை குறிப்பதால், இதற்கு பி.சி.ஓ.எஸ்., என்று பெயர்.
கருமுட்டைகள் முழுமையாக வளர்ச்சி அடையாததால், ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும்; மாதவிடாய் சீராக வேண்டும் என்பதற்காக மட்டும் மகப்பேறு டாக்டரிடம் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வர்.
கருக்குழாயில் கட்டி உருவாகி உள்ளது என்ற பொதுவான கருத்தால், சிகிச்சை எடுப் பதில் தாமதம் செய்கின்றனர்.
நீர்க்கட்டிகள் கருக்குழாயில் ஏற்படுகிறதே தவிர, அதற்கான காரணம் கருக்குழாய் இல்லை.
மாறாக, ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமும் 'மெட்பாலிசம்' எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் மாற்றமுமே பிரதான காரணம்.
குறிப்பாக, உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாதது, அதிக சர்க்கரை உணவுகள் போன்றவற்றால் உடல் செல்களில் ஏற்படும் இன்சுலின் ஹார்மோன் செயல்பாடு எதிர்ப்பு முக்கியமான காரணம். நீர்க்கட்டிகள் இருந்தால், எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் உள்ளது. இதையெல்லாம் டாக்டர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்வர்.
கடந்த, 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பி.சி.ஓ.எஸ்., என்ற பெயர் நோயின் தீவிரத்தை முழுமையாக உணர்த்தவில்லை. அதனால், வளர்சிதை மாற்றத்தைக் குறிக்கும் வகையில், பி.சி.எம்.எஸ்., என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக இருந்து வந்தது.
சர்வதேச அளவில் நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, பி.சி.ஓ.எஸ்., என்று சொல்வதை விட, பி.எம்.ஓ.எஸ்., என்று சொல்வதே, இப்பிரச்னைக்கு பொருத்தமாக இருக்கும் என்று, அதற்கான காரணிகளை விளக்கி, லான்செட் இதழில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
வெறுமனே மாதவிடாய் சீராவதற்கான மருந்து சாப்பிட்டால் மட்டும் பிரச்னை தீராது.
வாழ்க்கை முறை மாற்றங்களை சரிசெய்ய வேண்டும். அதற்கு பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் பெயர் இருக்க வேண்டும்.
கருக்குழாயில், நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான, அடிப்படை வளர்சிதை மாற்ற காரணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், புதிய பெயரானது உள்ளது. இது, இப்பிரச்னை ஏன் ஏற்படுகிறது என்பதையும், அதை எவ்வாறு தீர்க்கலாம் என்பதையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.
டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு மருத்துவர், இயக்குநர், டயாப் எண்டோஇண்டியா, சென்னை 98412 95644 reports@diabendoindia.com
