குழந்தையின்மையா... தம்பதியாக பரிசோதனைக்கு வாருங்கள்!
குழந்தையின்மையா... தம்பதியாக பரிசோதனைக்கு வாருங்கள்!
PUBLISHED ON : ஜூலை 26, 2026

'இன்பெர்ட்டிலிட்டி' எனப்படும் குழந்தையின்மை, இருபாலரையும் பாதித்தாலும், பெரும்பாலும் பெண்களிடம் மட்டுமே பிரச்னை இருப்பதாக நம்பப்படுகிறது. உண்மையில், 40 சதவீத ஆண்கள், குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; சமீப ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், நான்கு கோடிக்கு மேல் விந்தணு உற்பத்தி இருப்பதே இயல்பான நிலை என்றிருந்தது; தற்போது, 2 கோடி இருந்தாலே போதும் என்று சொல்ல வேண்டிய அளவுக்கு ஆண்களிடையே விந்தணு உற்பத்தி குறைந்து விட்டது.
பழைய எண்ணிக்கையில் பார்த்தால், இன்று 70 சதவீதம் ஆண்களுக்கு, விந்தணு குறைபாடு இருக்கலாம்.
விரைவான நகரமயமாக்கல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் உழைப்பின்மை, உட்கார்ந்தே வேலை செய்வது, வேலை தொடர்பான நாள்பட்ட மன அழுத்தம், புகைப்பிடித்தல் மற்றும் துாக்கமின்மை என்று இதற்கு பல காரணிகள் உள்ளன.
இத்துடன், நீர், காற்று மாசு, கலப்பட உணவுகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிற்சாலை கழிவுகள் ஏற்படுத்தும் அபாயங்கள், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை, ஆண்களின் மலட்டுத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.
நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வதால், மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
வெளிக்காரணிகள், உடல் ரீதியிலான பிரச்னைகளைத் தாண்டி, குழந்தையின்மைக்கு தாங்களும் காரணமாக இருக்கலாம் என்பதை நம்பி, ஏற்றுக் கொள்ள ஆண்கள் மறுக்கின்றனர்.
திருமணம் ஆகி சில ஆண்டுகள் குழந்தை இல்லை என்றால், பெண்கள் மட்டுமே மருத்துவ ஆலோசனைக்கு வருகின்றனர். பல நேரங்களில் பெண்கள் தனியாகவே வருவர்.
நம்மிடம் குறை இருந்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தால், ஆண்கள் வருவதில்லை.
ஆலோசனைக்கு வரும் பெண்களுக்கு, தைராய்டு ஹார்மோன் செயல்பாடு, கருப்பை, கருக்குழாயின் ஆரோக்கியம், மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை வளர்ச்சி, பி.சி.ஓ.எஸ்., பைப்ராய்டு என்று பலவித பிரச்னைகளுக்காக பரிசோதனைகள் செய்வோம். சிகிச்சைகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி என்று முறையான வழிகாட்டுதல்களுக்கு பின்னும், பல சமயங்களில், கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.
எல்லா விஷயங்களும் பெண்ணுக்கு இயல்பாக இருந்தும் ஏன் கர்ப்பம் தரிக்கவில்லை என்று அவருடைய துணையை அழைத்து பரிசோதித்தால், விந்தணுவில் குறைபாடு இருக்கும். ஆண்களுக்கு விந்தணு பரிசோதனை மட்டும் தான் செய்ய வேண்டும்.
முதல் முறை செய்த விந்தணு பரிசோதனையில் ஏதாவது குறை இருந்தால், அதுவே இறுதி முடிவும் கிடையாது. காரணம், விந்தணுவை ஆய்வுக்கு கொடுத்த நேரத்தில் காய்ச்சல், மன அழுத்தம், பதற்றத்திற்கு மருந்து சாப்பிடுவது, இரவு நேர வேலை, உறக்கமின்மை, சர்க்கரை கோளாறு, வேறு உடல் பிரச்னைகளுக்காக உண்ணும் மருந்துகள், சிகரெட் பழக்கம் என்று பல காரணிகள் விந்தணுவின் அளவை மாற்றும் அவை பரிசோதனையில் பிரதிபலிக்கும்.
கரு உருவாக, ஒரு கருமுட்டைக்கு, லட்சக்கணக்கில் ஆரோக்கியமான விந்தணுக்கள் அவசியம். அதனால்,
ஆரோக்கியமான வாழ்வியல் முறையை நான்கு வாரங்கள் பின்பற்றிய பின், மீண்டும் பரிசோதனை செய்து முடிவு செய்வது தான் சரியானது.
குழந்தையின்மை பிரச்னை யாரிடம் இருந்தாலும், தம்பதியாக சேர்ந்து ஆலோசனைக்கு வரும் போது, தீர்வு சுலபமாகும்.
டாக்டர் அரவிந்த் ரவிச்சந்திரன், கருவுறுதல், செயற்கை கருவாக்கம், ஆண்மையியல் மருத்துவ ஆலோசகர், கிளவுட்நைன் மருத்துவமனை, சென்னை 91500 73353opdomr@cloudninecare.com
