PUBLISHED ON : ஏப் 05, 2026

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு, மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் அதிகம்.
இவர்களில், 30 சதவீதம் பேர் மட்டுமே, மருத்துவ ஆலோசனை பெற வருகின்றனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் சொல்கின்றன. மாதவிடாய் தொடர்பான பிரச்னை இருந்தால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலும் இல்லை என்று தான் தெரிகிறது.
மாதவிடாய் சமயத்தில் வலி, அதிக ரத்தப் போக்கு, மனநிலையில் மாற்றம், 'மெனோபாஸ்' சமயத்தில் ஏற்படும் உடல், மன அசவுகரியங்கள் என்று அந்தந்த வயதில் ஏற்படும் மாற்றங்களை, இயல்பானது என்று எடுத்துக் கொள்கின்றனர். இதை சொல்லி புரிய வைக்கவோ, சிகிச்சை அவசியம் என்று சொல்லவோ, நாம் பழக்கப்படவே இல்லை.
இப்பிரச்னைகள் அதிகமாகி, இயல்பு வாழ்க்கையை மொத்தமாக பாதிக்கும் போது தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். புற நோயாளிகள் பிரிவில் நான் தினமும் பார்ப்பது இது தான். சிறிய பிரச்னையாக இருந்த போதே வந்திருந்தால், இத்தனை பெரிய விஷயமாக மாறியிருக்காது என்று தான் தோன்றும்.
மாதவிடாய் வலி இயல்பானதா?
மருத்துவரீதியில், இதை இரண்டாகப் பிரிக்கிறோம்.
ஒன்று, மாதவிடாய் வருவதற்கு முன், வலியுடன் ஆரம்பிக்கலாம். முதல் இரண்டு நாளில் அந்த வலி தானாக சரியாகி விடும். மூன்றாவது நாள் வலியே இருக்காது. இது தான் இயல்பானது.
ஆனால், சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன்பே வலி வந்து, மாதவிடாய் முடிந்த பின்னும் வலி வரலாம். மாதவிடாயின் போது, ஆறேழு நாட்கள் ரத்தப்போக்கு இருந்தால், ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று தவறாக நினைக்கின்றனர். அப்படி இல்லை. அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப, இரண்டு, மூன்று, ஐந்து என்று ரத்தப்போக்கின் தன்மை மாறும். ஒரு நாள் ஐந்தாறு நாப்கின்கள் மாற்றி, ஏழெட்டு நாட்கள் தொடர்வது, இயல்பானது இல்லை.
குழந்தைப் பருவத்தில், மாதவிடாய் ஆரம்பிக்கும் போது, ஹார்மோன் செயல்பாடுகள் முழுமையாக இருக்காது. எனவே, மாதவிடாய் வருவதில் சீரற்ற தன்மை இருக்கலாம். சில மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வரலாம். குழந்தைக்கு ரத்தசோகையை ஏற்படுத்தும் அளவுக்கு, ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் மட்டும் அவசியமான சிகிச்சை தரலாம்.
மற்றபடி தேவையில்லாமல் மருந்து, மாத்திரைகள் கொடுத்து, ஹார்மோன் செயல்பாட்டை, அழுத்தத்திற்கு உட்படுத்தக் கூடாது.
இதுவே, 20 வயதிற்கு மேற்பட்ட, திருமணமான, குழந்தை பெற திட்டமிடும் பெண்களுக்கு, பிரச்னை இருந்தால், ஹார்மோன்கள் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கிறதா என்று பார்த்து, சிகிச்சை தர வேண்டும்.
மெனோபாஸ் வயதில் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள், மனநிலை, உணர்வு நிலையில் மாற்றம், வெப்பமாக உணர்வது, சிறுநீர் பிரச்னைகள், மெனோபாஸ் வயதில் இருக்கும். இவற்றை இயல்பானது என்று நினைப்பது தவறு.
பைப்ராய்டு கட்டி, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது கேன்சராகவும் இருக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே முறையாக பரிசோதனை செய்து கொண்டால், சுலபமாக சிகிச்சை செய்து, குணம் பெற முடியும்.
டாக்டர் கீர்த்த னா ராஜசேகரன், மகப்பேறு மருத்துவர், எஸ்.ஆர்.எம்.,பிரைம் மருத்துவமனை, சென்னை. 044 35453545info@srmhospitals.com

