PUBLISHED ON : மார் 08, 2026

வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் உடல் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவது, பெண்கள். காரணம், வீடு, பொருளாதாரம் என்று இரண்டு பொறுப்புகளையும் சுமக்கும் பெண்களால், தங்களுக்கென்று நேரம் ஒதுக்க முடிவதில்லை; விளைவு, மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு தேய்மானம் என, பல பிரச்னைகள்.
இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், 'நான் ஒன்றும் சோம்பேறியாக இல்லையே... வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறேன். அலுவலகம் சென்றால், 'லிப்ட்' பயன்படுத்துவதில்லை. பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அரை கி.மீ., துாரம் நடந்தே செல்வேன். அப்படியும் ஏன், 'வெயிட்' போடுது; ஆர்த்தோ பிரச்னை வருது' என்ற கேள்வி மனதில் எழும்.
எல்லாம் சரி தான்... அடிப்படையான சில விஷயங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சரியான உடல் எடையுடன் இருந்தால், 'பிட்னெசை' பராமரிப்பதற்கு, படி ஏறலாம். அதுவே, உடல் பருமனுடன் இருப்பவர்கள், சிரமப்பட்டு படி ஏறினால், தரையை சுத்தம் செய்தால், எலும்பு தசைகளில் பிரச்னை, மூட்டு வலி வரும்.
சாதாரணமாகவே, படி ஏறுவதற்கு, ஐந்து நிமிடங்கள் ஆகிறது, 10 நிமிடம் வீட்டை சுத்தம் செய்வது... இதெல்லாம் உடற்பயிற்சியில் சேராது. குறைந்த பட்சம், 45 நிமிடங்களாவது, ஏதாவது ஒரு பயிற்சியை செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி செய்தால், தினமும், 'ஸ்விட்ச்' போட்ட மாதிரி அதையே செய்யக் கூடாது. அப்படி செய்தால், குறிப்பிட்ட விஷயத்திற்கு தசைகள் பழகி விடும்; இதனால் பெரிதாக பலன் கிடையாது. இதை, 'மசில் மெமரி' என்று சொல்வோம். வாரத்தில், இரண்டு நாட்கள் நடைப்பயிற்சி, அடுத்த இரண்டு நாட்கள் நீச்சல் பயிற்சி, அடுத்து சைக்கிளிங் என்று மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இதுவும் குறிப்பிட்ட பயிற்சி தான் என்றாலும், மாற்றி மாற்றி செய்யும் போது, தசைகளுக்கு புதிதாக இருக்கும்.
உடல் எடையைக் குறைத்து, தசைகள் வலிமையாக இருக்க, நீச்சல் பயிற்சி முழுமையாக பலன் தரும். அதன்பின், சைக்கிளிங், அடுத்தது நடைப் பயிற்சி, கடைசியாக ஜாகிங்... ஒரு குறிப்பிட்ட உடல் பாகத்தில் உள்ள தசைகளின் வலிமைக்கு, 'ஜிம்'மில் பயிற்சி செய்யலாம்.
எலும்புகளின் வலிமைக்கு கால்ஷியம் அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால், ரத்தத்தில் சேரும் இந்த சத்து, முறையான உடற்பயிற்சி செய்யாவிட்டால், ரத்தத்திலேயே இருக்கும். உடற்பயிற்சியின் போது தான், ரத்தத்தில் உள்ள கால்ஷியம், எலும்புகளில் போய் சேரும்.
ஆரோக்கியத்தை பராமரிக்க பெண்களுக்கு நேரம் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எவ்வளவு பொறுப்புகளை சுமந்தாலும், தங்களுக்கென்று தினமும் 3 மணி நேரத்தை பெண்கள் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
உணவு விஷயத்திலும், தேவைக்கு ஏற்ப, திட்டமிட்ட உணவை சாப்பிடுவது முக்கியம். எல்லாருக்கும் சமைப்பதையே, தானும் சாப்பிடுவதே பெண்களின் வழக்கம்; இதுவும் மாற வேண்டும். பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான், வீடு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

