PUBLISHED ON : மார் 15, 2026

'மெனோபாஸ்' என்பதை ஆயுர்வேத மருத்துவம் ஒரு நோயாக பார்ப்பதில்லை. நம் உடல் நிலையில், குறிப்பிட்ட வயதில் ஏற்படும் மாற்றமாக பார்க்கிறது. 45 - -55 வயதிற்குள், தொடர்ச்சியாக ஒரு ஆண்டு மாதவிடாய் வராமல் இருந்தால், மெனோபாஸ் மாற்றத்தை உடல் அடைந்து விட்டதாக கொள்ளலாம்.
இந்த 12 மாதங்களில் உடல், மன அளவில் நிறைய அறிகுறிகள் தெரியும். இதை மெனோபாஸிற்கு முந்தைய காலகட்டம் என்று சொல்கிறோம்.
சில பெண்கள் இந்த மாற்றத்தை சகஜமாக எதிர்கொள்வர்; சிலரால் அது முடியாது.
கரு முட்டை வளர்ச்சி இல்லாததால், மாதவிடாய் இருக்காது. மாதவிடாய் வயதில், ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான், டெஸ்ட்டோஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் கர்ப்பப் பையில் சுரக்கும். கரு முட்டை வளர்ச்சி குறையும் போது, ஹார்மோன்களின் சுரப்பும் குறைய ஆரம்பிக்கும். இது தவிர, ஹைப்போதாலமஸ் சுரக்கும் ஹார்மோன்களும் உடல், மன மாற்றத்தில் பங்கு வகிக்கின்றன.
ஆயுர்வேதம் கூறும் மெனோபாஸ்
இனப்பெருக்க வயதை தாண்டியதும், உடம்பின் செயல்பாடுகள், ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, வாதம் அதிகரிக்கிறது.
தினசரி தலை, உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து குளிப்பது, மெல்லிய நரம்புகள் உள்ள காது, கழுத்தின் பின்பகுதி, பாதங்களில் எண்ணெய் தேய்த்து மிதமாக மசாஜ் செய்வது அவசியம்.
இவையெல்லாம் வாதத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய ஒரு வழி.
இந்த சமயத்தில் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி, வலியில் இருந்து நிவாரணம் பெற, எண்ணெய் சேர்த்த மூங்கில் நாரால் புற சிகிச்சை தரப்படும்.
சிலருக்கு மன அழுத்தம் வரலாம். இவர்களுக்கு ஷிரோதாரா, ஷிரோபிஜூ போன்ற சிகிச்சைகள் தரும்போது, இவை மனதை அமைதிப்படுத்த உதவுகின்றன.
தீவிர அறிகுறிகள் இருந்தால், ஷோதனா என்ற சிகிச்சை தரப்படும்.
மூலிகை மருந்துகள் தந்து, வாந்தி எடுக்கச் செய்யும் வமனா, விரேசனா, செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யும் வஸ்தி, ரத்த மோக் ஷனா, நஸ்சியா என்ற பஞ்சகர்மா சிகிச்சையும் பலன் தரும். இந்த சிகிச்சைகளால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி விடும். அதன் பின், தொடர்ந்து உடல் நலத்தை புத்துணர்வுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க, பலாசதாவரி, அஸ்வகந்தா போன்ற மூலிகை மருந்துகளை, ஆயுர்வேத டாக்டரின் பரிந்துரைப்படி உபயோகிக்கலாம்.
அறிகுறிகள் குறையும் வரை மருந்துகள், சிகிச்சை தேவைப் படலாம்.
பொதுவாக, வாத தோஷம் அதிகரிப்பதால் தான் மெனோபாஸ் வரும். சிலருக்கு பித்த தோஷம் அதிகமாவதாலும் வரலாம்.
எந்த தோஷம் அதிகமாக உள்ளதோ, அதை குறைப்பதற்கான சிகிச்சை, ஏழு நாட்கள் முதல் -ஒரு ஆண்டு வரை, தேவைக்கு ஏற்ப தரப்படும்.
எந்த சிகிச்சையும் வாழ்க்கை முழுதும் பலன் தரும் என்று சொல்ல முடியாது. அதனால், ஆண்டிற்கு அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
அதிக எண்ணெய், மசாலா பொருட்களை தவிர்த்து, நெய், பால் போன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதை தினசரி வழக்கமாக்க வேண்டும். யோகா, தியானம் ஆகியவை செய்து மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, எட்டு மணி நேர ஆழ்ந்த துாக்கம் அவசியம்.
டாக்டர் வி.எம்.மோனிஷா, ஆயுர்வேத மருத்துவர், அப்பல்லோ மருத்துவ மையம், சென்னை 95666 25848monisha__m@ayurvaid.com

